Tuesday, November 28, 2017

ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது மின் தடங்கல் ஏற்பட்டால்? கவிஞர் தணிகை

ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது மின் தடங்கல் ஏற்பட்டால்? கவிஞர் தணிகை
Image result for if Electricity stopped while taking money in Atms?



இது என்னுடன் ரயிலில் பயணம் செய்யும் ரெயில்வே பணியாளர்க்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவம். அவர் ஓமலூரில் உள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்கில் ரூபாய் 2000 எடுக்கும்போது மின் தடங்கல் ஏற்பட பணம் வரவில்லை. இவர் எடுக்கவில்லை. ஆனால் இவரின் ஸ்டேட் பாங்க் கணக்கில் எடுத்ததாக பணம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு விட்டது.

அப்படி நேரும்போது அந்த ஏ.டி.எம் சி.சி.டி.வியில் தமது கார்டை காண்பித்துவிட்டு தமது முகத்தையும் காண்பிக்கலாம் ஏன் உண்மையைக் கூட பகிர்ந்து சொல்லிக் கொள்ளலாம். அது பதிவாகும்.

அதன் பின் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த ஏ.டி.எம். நடத்தும் வங்கியின் அண்மையக் கிளைக்கு சென்று தமக்கு நேர்ந்ததை விவரித்து வேண்டுகோளை வாய்மொழியாகவும், எழுத்து மூலமும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் இவர் செய்யவில்லை. இரவு நேரம் என்பதால் இவர் வங்கியை அணுக எந்த வித முயற்சியும் எடுக்க முடியாமல் எடுக்காமல் மறு நாளில் இருந்து தமது ரெயில்வே பணிக்கு செல்ல ஆரம்பித்ததுடன் தாமாக எங்கும் இதற்கான முயற்சி எடுக்காமல் தமது தந்தையை அனுப்பி ஸ்டேட் பாங்கை அணுகி இருக்கிறார்.

 ஸ்டேட்  பாங்கிற்கு தமது தந்தையை அனுப்பி பார்க்கச் சொல்ல, அவர்கள் பணம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது எனவே கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. கணக்கு யார் பேரில் உள்ளதோ அவரையே வந்து பார்க்கச் சொல்லுங்கள். எனத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

தம்பி மாது என்ன சொல்கிறார் எனில் இது இரண்டாயிரம் சரி, ஆனால் என் சம்பளம் எடுக்கும்போதும் இப்படி நடந்திருந்தால் எல்லாமே போய்விடுமே...என அங்கலாய்க்கிறார்.

தொடர்புடைய ஏ.டி.எம் வங்கிக் கணக்கிலும், ஏ.டி.எம் எந்திரத்திலும் எடுக்காத இவர் பணம் பற்றிய மிச்சம், எச்சம், சொச்சம் இருக்க வாய்ப்புண்டு. அல்லது மின்சாரம் வந்த பின்னே யார் முதலில் எடுத்தார்களோ அவர்களுக்கும் கூட கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

இதை எல்லாம் ஆய்ந்து பார்த்து இவருக்கு நீதி வழங்கும் முன் மிகவும் கால தாமதம் ஏற்பட்டு இவர் விரக்தி நிலைக்குத் தள்ளப்படலாம்.இந்தியாவில் இது போன்ற எந்திரத்தனமான தவறுகள் நடந்தபடியேதான் இருக்கின்றன தீர்வு சொல்லப்படாமலே..

ஷாக் அடிக்காத கரண்ட்,மூடப்படாத ஆழ்துளைக்குழாயில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றி மீட்கும் எந்திரம், பனை தென்னை ஏறும் எந்திரம், தேங்காய் உரிக்கும் எந்திரம், நிறைய விவசாயம் தொடர்பான கருவிகளும், வாகனங்களும், எந்திரங்களும் இன்னும் பெரிதும் பயன்பாட்டுக்கு வரும் வண்ணம் எந்த அரசுகளும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

தடை இல்லாத மின்சாரம் என்பார் ஆனால் அது தடையில்லாமல் வார்த்தையில் மட்டும்...வரும்.


ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது இது போன்ற தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சரியாகவே எப்போதும் போல வழக்கம்போல் இயக்கி வாடிக்கையாளருக்கு ஒரு இடையூறும் இல்லாமல் செய்வது என்ற உத்தி பயன்படுத்தப் பட வேண்டுமல்லவா? மேலும் அவசியமான சேவை எல்லாம் 24 மணி நேரமும் இருக்க வேண்டுமல்லவா?

இதை எல்லாம் விட்டு விட்டு ட்ரம்ப் மகளுக்கு உலகிலேயே மாபெரும் விருந்தும் அதில் உலக அழகி எல்லாம் கலந்துகொள்வதும் இந்தியா ஒரு பக்கம் மிக வளர்ந்தும் மறுபக்கம் மிக தேய்ந்துமாக...


சரி இது ஒரு சிறிய விஷயம்தாம் எங்கும் நடைபெறுவதுதான் இதற்கு எதற்கு இந்தப் பதிவு என்கிறீர்களா? அவரவர்க்கு நேரும்போதுதான் அந்த வலி தெரியும். நாம் இந்தப் பதிவின் மூலம் அது போன்ற வலியை பெறுவார் சார்பாக ஆதரவாக நிற்கிறோம். இனியும் இது போன்ற அரசின் மெத்தனப் பிழைகள் சாதாரண அப்பாவி மனிதர்களை ஏ.டி.எம் வாசலில் தமது சுய சம்பாத்தியப் பணத்தை எடுக்க முடியாமல் பசியால் தடுமாறி தமது பயன்பாட்டுக்கே அந்தப் பணம் பயன்படாமல் பிணமான பின்னும் போய்விட்டதே என்ற அவலங்கள் நேரக்கூடாது இனியும் என்ற ஆதங்கத்தில் சொல்கிறோம்

சரி அரசியல் நிலவரம், கலவரம் களேபரத்துக்கு வருவோமா? கமல் பாரதிய ஜந்தாவுடன் கூட மக்களுக்குத் தேவையென்றால் கூட்டு வைத்துக்கொள்வாராம் முதிர்வில்லாத அரசியல் தடம் பதிக்க ஆசைப்படும் விஸ்வரூபக் குழந்தை.

எடப்பாடி அணிக்கு தினகரன் எம்.பிக்கள் எம்பி எம்பி போய்விட்டார்கள்..

குஜராத் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அத்வானிக்கு விலக்கு அளித்து விட்டார்கள்

ஆர்கே நகர் 21 ஆம் தேதி டிசம்பரில் களை கட்டு முன்னே  கட்டு கட்டாக பணம் நகருள் சென்று கொண்டிருப்பதாக செய்திகள்...இதை தேர்தல் ஆணையம் தடுக்கிறோம் என சூளுரை.

இரு அணிகளும் இணைந்த திருப்தியும், இரட்டை இலையும் மாயம் செய்யும் என்று மனப்பால் குடிக்கும் அ.இ.அ.தி.மு.கவும், இந்த முறை சென்னையில் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வென்றே தீரும் என்ற நம்பிக்கையில் அவரக்ளும், மற்றவர்கள் பற்றி எல்லாம் எழுதி உங்கள் நேரமும் என் நேரமும் எந்நேரமும் விரயம் ஆகிடக் கூடாது விட்டு விடுவோம்.

விவசாயிகளுக்கு முகம் காட்டாத‌ பிரதமர் ட்ரம்ப் மகளுக்கு விருந்து கொடுப்பதன் வாயிலாக கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க இருக்கிறார் மாபெரும் விருந்து கொடுத்தோர் என்ற பட்டியலில்.

ஆள் பார்த்து சலான் எழுதி லெட்ஜரில் போஸ்ட் செய்து டோக்கன் கொடுத்து பணம் கொடுத்த காலம் பரவாயில்லை. மனிதத் தொடர்புகள் இருந்தன. இப்போது எந்திரத்தனமாக மனிதம் மாறிவிட்டது. ஏ.டி.எம்மில் வரும் கள்ள நோட்டை வங்கிக்கு வெளியில் சென்றுவிட்டு வந்து மறுபடியும் கேட்டவர்க்கு அதைப்பற்றிய விளக்கமில்லை. அதை மாற்றித் தரவுமில்லை.

வாழ்க பாரதம். வாழிய மணித்திரு நாடு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


All our ATMs have a telephone which you can just pick up and you are connected to the call centre. You can inform the call centre or the branch, whichever is convenient.”
some solutions:

with in 12 days the complaint should be resolved by the bank.

Always ask for a receipt for every ATM transaction. Details such as exact time of withdrawal, the transaction number, the ATM or branch number and the amount would be specifically mentioned in the receipt. In case you haven’t asked for a receipt, you can manually note down the details by asking the non-available details from the security guard or the nearest bank branch.
Also, in case the money has not popped out, make sure you have an eye witness to the incident.

Sunday, November 19, 2017

தீரன் (திருமாறன்)அதிகாரம் ஒன்று: கவிஞர் தணிகை

தீரன் (திருமாறன்)அதிகாரம் ஒன்று: கவிஞர் தணிகை
Image result for theeran adhigaram ondru

Image result for theeran adhigaram ondru


ஹெச். வினோத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் பவாரிய கொள்ளைக்காரர்களை எப்படி தமிழக காவல்துறை பிடித்து அவர்கள் கொலை கொள்ளையை அடக்கி வெற்றி கண்டது என்ற உண்மைச் சம்பவத்தை உண்மையாகவே நன்றாக படமாக்கியுள்ளனர். படக்குழுவினர் அனைவர்க்கும் வணக்கமும், நன்றியும் , வாழ்த்துகளும்.

தீரன் அதிகாரம் ஒன்று  எ போலீஸ் ஸ்டோரி.

சோலே இந்திப் படத்தை தொட்டுச் சென்றிருக்கும் கதாபாத்திர கொடூரமான தேர்வுகளும் முக ஒப்பனைகளும் ஆள் பலமும்.

ஓநாய் ஒன்று துரத்த மற்றொன்று எப்படி எதிர்பாராமல் வேட்டையாடும் மற்ற மிருகங்களை என்று  திட்டமிட்ட கொலைக் கொள்ளைக் கூட்டம், இராஜஸ்தான் கிராமங்களில் இருந்து நாட்டுக்குள் எப்படி கம்பளி விற்பாராக ஊடுருவி அவர்கள் உதவியுடன் அவர்கள் தரும் அந்த வீட்டைப்பற்றிய தகவல் முழுதையும் திரட்டிக் கொண்டு ட்ரக் லாரிகளில் சென்று  தனியாக இருக்கும் மாபெரும் வீடுகளுள் நுழைந்து  அவர்களை கொடுரூரமாக கொன்று, அது குழந்தையா, பெரியவ்ர்களா, பெண்களா, முதியவரா என்றெல்லாம் காரண காரியம் பார்க்காமல் அடித்தே கொன்று நகைகளை பணத்தை கொள்ளை கொள்ளும் கும்பல்.

குற்றப்பரம்பரையில் எப்படி உருவாகி இந்தியாவெங்கும் ஊடுருவி கடைசியில் தமிழகத்தில் கால் பதித்து, கொலை, கொள்ளை செய்துவிட்டு எப்படி தப்பித்து ஒரு மாநிலம் விட்டு மறு மாநிலம் மாறிச் செல்கிறார்கள், அவர்கள் இராஜஸ்தான் பாலை நிலக் கிராமங்களில் எப்படி வாழ்கிறார்கள் எனத் துல்லியமாக தெளிவாக படம் வரலாற்றுப் பதிவான கதையை நன்கு விளக்கி இருக்கிறது.

படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங். இயல்பாக புகுந்து விளையாடி இருக்கிறார்கள். கார்த்தியின் டாக்டர் மனைவிக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் இருக்கிறதா? எங்களுக்கு இது சினிமாத் தொடல்கள் படப்பிடிப்புகளாகத் தோன்றவில்லை.

வாழ்ந்திருக்கிறார்கள். கணவனும் மனைவியுமாக, காதலும், காதலுருமாக‌

 தந்தை சிவகுமார், அண்ணன் சூரியா ஆகியோரை தம் குறைந்த பட்ச பட எண்ணிக்கையிலேயே  கார்த்தி மிஞ்சி விட்டார்.

Related image

சிறுத்தை படத்தை அடுத்து இவருக்கு இது இப்போது அதையும் மிஞ்சி வெளிவந்து வெற்றியை புகழை பேரை ஈட்டித் தந்திருக்கும் படம். காற்று வெளியிடை தோல்வியை வெற்றி ஆக்கி திருப்பு முனை ஆக்கியுள்ள படம்.

இயக்குனர் மனோபாலா நகைச்சுவைத் தந்தையாகவும் குணச் சித்திர தந்தையாகவும் நன்றாகவே செய்துள்ளார் தமது பெண் அடிக்கும் லூட்டிகளுடன் தாமும் சேர்ந்து.

தயாரிப்பு, இசை, எடிட்டிங், காமிரா இப்படி சினிமாவின் பல துறைகளும் இத்துடன் கை கோர்த்து ஒரு முழுமையான படமாக உருவாகி உருவாக்கி 163 நிமிடம் நம்மை எல்லாம் கதையுடன் காலத்தை பயணிக்க வைக்கிறது.

மெர்சல் ஏதோ மெசேஜ் சொல்கிறேன் என வந்து வசூல் அள்ளிய படம் அதை எல்லாம் விட சமீபகாலத்தில் வந்த படங்களில் இதை நல்ல படம் என்று சொல்லலாம்.

துப்பறிவாளனை விட இது நன்றாகவே இருக்கிறது.
Image result for theeran adhigaram ondru

அருமையான வசனமும் திரைக்கதையும் படம் போவதையே நமக்கு நேரம் காலம் தெரியாமல் ஆக்கி விடுகிறது. அதே நேரத்தில் சமூகத்தாக்கமும், நல்ல செய்திகளையும் பதிவு செய்துள்ளது. சதுரங்க வேட்டைக்கும் பின் அதிகாரம் ஒன்று தீரன், வீரன், திருமாறன்.

ஏண்டா தமிழகத்தில வந்து இப்படி ஈவு இரக்கமே இல்லாம கொள்ளை அடித்துக் கொலை செய்றீங்க என்ற கேள்விக்கு:




தமிழகத்துப் பெண்கள் கழுத்தில் போட்டுள்ள நகையைப் பார்த்தா வீட்டுள் எவ்வளவு இருக்கும் என்ற காரணத்தாலும்

உ.பி போலீஸாரிடம் துப்பாக்கி உண்டு ஓடினாலும் சுட்டு விடுவான்கள், தமிழகத்துப் போலீஸாரிடம் துப்பாக்கி எல்லாம் இல்லை, செக் போஸ்டில் கூட ஒரு 50 ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி உள்ளார்கள்...ஆனால் மெர்சல் படத்துக்கு மருத்துவர்கள் வெகுண்டு எழுந்தது போன்று இதில் எந்த காவல்துறையும் போராட முன்வரவில்லை ஏன் எனில் போலீஸ் ஸ்டோரி ஈஸ் கிரேட்.

ஒரு விசாரணையின் போது காவல்காரர் சொல்கிறார், எம் பொண்டாட்டி, நகைக்காக உயிரே போனாலும் போகட்டுங்க என்று சொல்வதாகவும் கேலியாக நகை போட்டு வெளியில் செல்வாரைக் கேலி செய்துள்ளார்கள்.

குழந்தை கழுத்தில் நகை இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை உயிர் தெரியாது, நகை மட்டும்தான் அவர்கள் கண்ணுக்குத் தெரியும் என்ற வசனம் ஒன்றே போதும்..


திருடுவது, கொலை செய்வது, கொள்ளை அடிப்பது யாவுமே குற்றம்தான். திருடத் தூண்டுவதாக இது போன்று நிறைய நகையை அணிந்து சென்று குற்றம் புரியத் தூண்டுவதும், ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதும் மனித இயல்பின் அறியாமை, குறை, தவறு குற்றம்தான். உணர்ந்து கொண்டால் சரி.ஆனால் இது போன்ற நல்ல செய்திகளை உணர்த்தினாலும் யார் திருந்தப் போகிறார்கள் என்பதுவே கேள்வி.

மேலும் சாதாரண மனிதர்க்கு இது போன்ற சம்பவங்கள் நேரும்போது வாளாவிருக்கும் அரசு, எம்.பி, எம்.எல்.ஏக்கள், பெரிய மனிதர்கள், அவர்களுக்கு என்று நேரும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது இல்லையா என நல்ல கேள்விகள்...
Image result for theeran adhigaram ondru

மிகவும் ஈடுபாட்டுடன் பணி செய்வாருக்கு எல்லாம் சமூக அரசு அந்தஸ்து எல்லாம் கிடைப்பதில்லை என கடைசியில் இவருக்கு ஒரு அதாவது தீரன் திருமாறனுக்கு அந்த ஐ.ஏ.எஸ் அலுவலருக்கு ஒரு சிறு அறைக்குள் தமது சேர் டேபுளுக்கும் கூட அரசு அனுமதித்து அப்புறம் தான் கிடைக்க வேண்டிய சூழல் , சிறு பதவியில் போட்டு உள் கட்டி வைத்து விடுவார்களி, விடுகிறார்கள் என்று நிதர்சனமான உண்மையுடன் ஆரம்பிட்து உண்மையுடன் முடித்து அதனிடையே நமக்கு ஒரு நல்ல சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்.

போஸ் வெங்கட் துணைக் கதாநாயகராக நன்றாக நடித்திருப்பதை சொல்லாமல் விட்டால் இந்தப் பதிவு நிறைவு பெற்றிருக்காது.டிங் டிங் டிங்கானா சோலேவின் ஹெலன் மெஹ்பூபா பாடலுக்கு சமம்.

தெலுங்குப் பதிப்பில்  காக்கி தி பவர் ஆப் போலீஸ் என்று வெளியான இந்தப் படம் தமிழில் 17 நவம்பரில் வெளியாகி 163 நிமிடங்கள் நமையெல்லாம் உள் வாங்கிக்கொள்கிறது.

Related image

தாராளமாக 60+ கொடுக்கலாம். எந்த இடத்திலும் குற்றம் குறை காண முடியாததால்.
அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். பார்க்க வேண்டிய படம். பாருங்கள்


தமன்னா, கேத்ரின் தெரஸா அப்புறம் ரகு ப்ரீத் சிங் எல்லாமே கார்த்தியுடன் ஒட்டி உறவாடவே விரும்புகிறார்கள் டாக்டர் மிசஸ் கார்த்தி நோட் திஸ் பாயின்ட்.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, November 12, 2017

வயதான காலத்தில் கடினமின்றி உடற்கழிவுகள் நீங்கினாலே பேரின்பம்:= கவிஞர் தணிகை.

வயதான காலத்தில் கடினமின்றி உடற்கழிவுகள்   நீங்கினாலே பேரின்பம்:= கவிஞர் தணிகை.


Related image
சுஜாதா தம் 70 ஆம் வயதில் நிலவு, கனவு, எல்லாம் போய் காலையில் எழுந்தவுடன் மலம் சிக்கலின்றி கழிவதே சுகமானது என்றும், கி.ராஜநாராயணன் உரிய நேரத்தில் சிறு நீர் கழிப்பதும், மலத்தை வெளியேற்றுவதும், காற்றுப் பிரிதலுமே பேரின்பம் என்றும் எழுதிச் சென்றார்கள் என்றால் அதில் நிறைய அனுபவ அறிவு இருக்கிறது.

நானறிந்த பெரியவர் ஒருவர் 4 ஆம் வகுப்பு படித்தவர் ஆனால் ஒரு கோடீஸ்வரர், வயதான காலத்தில் பெரிய வயிற்றுடன் இருப்பார், இவருக்கு மலம் கழிதலும், சிறு நீர் கழித்தலுமே பெரும் பிரச்சனையாக மாறி உடலெல்லாம் எரிகிறதே என ஆடை கூட அணிய முடியவில்லையே என்று உயிர் பிரிந்த கதை எல்லாம் நாமறிந்ததுதான்.

பெரும்பாலும் உடல் இயக்கங்கள் மெதுவாக ஒவ்வொன்றாக இயங்க மறுத்து அடம் பிடித்து உடற்கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பதுவே அவர்களது முடிவுக்கு காரணமாக இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இருதயம் இயங்கவில்லை, நுரையீரல் இயங்கவில்லை, சிறுநீரகம் இயங்கவில்லை, மலம் கழியவில்லை....இப்படியாக சொல்வார் வயதில் பெரியார்கள்,

 ஏன் பெரியார் ஈ.வெ.ரா கூட சிறு நீர் சொம்பை கூட கொண்டு சென்று கொண்டே கூட்டத்தில் பங்கெடுத்ததாக அறிகிறோம். அவர் பகுத்தறிவு பகலவன் என்ற போதும், தம் உடலின் செயல்பாட்டுக் குறைபாடுகள் என்பது அனைவர்க்கும் பொருந்தும் அது ஞானி, முனிவர், சித்தர், யோகி , தவசீலர் என்ற போதும் ஆனால் அவர்கள் உடல் ஓம்பும் முறைகளை தம் தவ வாழ்வில் நியமங்களாக கடைப் பிடித்தமையால் உடல் அப்படி பெரிய அளவில் துன்பம் கொடுத்து முடிவுகளை ஏற்படுத்தவில்லை.

Related image

ஆக வயது ஏற ஏற 40 , 60, 80 என்று வயது ஆக, ஆக, சாதாரணமாக அன்றாடம் அவ்வப்போது செய்ய வேண்டிய சிறு நீர் கழித்தலும், மலம் கழித்தலும் இயல்பான உடல் உபாதைகளையும் உடல் இயக்கம் செய்து கொண்டிருந்தாலே அது பெரிய சுகமாகிவிடுகிறது.

அதே போல்தான் வியர்வை வெளியேறுவதும்...ஆனால் அதிகமாக வியர்ப்பது மாரடைப்பின் அறிகுறி என்றும் அடையாளங்களாகிவிடுகின்றன.

எனவே பள்ளிப் பிள்ளைகளுக்கும், நம் வீட்டின் குழந்தைகளுக்கும் உடல் பராமரிப்பு முறைகளை முறையாக எப்படி செய்வது என்று கற்றுக் கொடுப்பதுவே முதன்மையான கல்வியாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர்கள் அதைப்பற்றி கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு உகந்த உரிய கல்வியாளர்களை, வல்லுனர்களை கேட்டு படித்தறிந்து பயன்படுத்துவது பக்குவமான அறிவின் செயல்பாடு ஆகும்.

ஏன் எனில் கல்லூரிப் பருவம் எய்திய மாணவர்களுக்கும் முதிய வயதினர்க்கும் கூட எப்படி வாய் சுத்தம் செய்து கொள்வது, பல் விளக்குவது, ஆசனவாய் சுத்தம் செய்வது, குளி(ர்)ப்பது, உடலைக் குளிர்விப்பது நடைப்பயிற்சி செய்வது, துவட்டிக் கொள்வது, நீர் பருகுவது, உணவு உண்பது, பற்றிய நிறைய குளறுபடிகள் உள்ளன.

இவை எல்லாம் ஒரு ஒழுங்கமைய இருக்கும்போது உடலின் செயல்பாடு நீண்டு சீராக இயங்கி ஆயுள், வாழ்நாள் அதிகரிக்கவே செய்கிறது. இப்படி இருப்பார்க்கும் விபத்து போன்றவை நேரலாம் அது வேறு.

தினம் இரண்டு, வாரம் இரண்டு, மாதமிரண்டு, ஆண்டுக்கிரண்டு பற்றி எல்லாம் ஏற்கெனவே பல முறை சொல்லிவிட்டதால் அதை இங்கு மேலும் விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். இதற்கெல்லாம் சரியாக நேரம் ஒதுக்காத போது உடல் சரியாக பணி புரிய மறுக்கிறது அதன் விளைவாக நிறைய நோய் வாய் பிணிகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சாக்லேட், கேக், சமோசா, பிட்சா போன்ற பேக்கரி /அடுமனை தின்பண்டங்களை உண்ணக் கூடாது என பல் மருத்துவர்கள் சொல்வதுண்டு அது ஏன் எனில் அவை எல்லாம் உடலுள் சென்று செரிமானம் ஆனது போக எஞ்சியிருப்பவை குடலின் உட்புறச் சுவர்களில் படிந்து கொள்கிறது மலமிளக்காமல் கட்டிப்பட்டு நிற்க காரணமாகிவிடுகிறது. இதன் பலனாக சோம்பல் உணவு உண்ணும் அளவு குறைவு, வயிறு உப்புசம் வயிறு பெருத்தல், வாய்வு பிரிதல், துர்நாற்றமான வாயு பிரிதல், போன்ற உடலின் செயல்பாட்டுக் குறைவின் அறிகுறிகள் தோன்றுகின்றன.


Related image

எனவே உடனே மலச்சிக்கலை நீக்க ஆவன செய்ய வேண்டும். நீர் நிறைய பருகுவதும், மலக்குடலுள் குதத்துள் விரலை விட்டு வெளிநீக்கி சுத்தம் செய்வதும் அவசியமான செயல்பாடாகிவிடுகின்றன.

அனுபவத்தை சொல்கிறேன், நிறைய சாக்லேட் சாப்பிட்டதால், ஒருவருக்கு இப்படித்த்தான் வயிறு பெருத்தது போலாகி, உணவின் உட்கொள்வதன் அளவு குறைந்து ஒரு வாறான உடல் இறுக்கம் ஏற்பட்டது.

ஒரு நாள் அவர் தம் மலம் கழித்தலை சீர் செய்ய உடலே புதுப்பிக்கப்பட்டது போன்றும் அதன் பின் சனி நீராடி மேலும் உடலை புதுப்பித்துக் கொண்டதும் மறுபிறப்பை எய்தியது போன்றும் ஆகிவிட்டது என்கிறார்.

உடல் சூட்டை தணிக்க இரவில் தலைக்கு, தொப்பூள் குழிக்கு, கால் பாதத்துக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பதுவும், கண்களை அடிக்கடி வாயகன்ற அகலச் சட்டியில் (அவலச் சட்டி என்று பெரியவர்கள் சொல்வதுமுண்டு குளிர்ந்த நீரை வைத்து அடிக்கடி கண்களை அதில் மூழ்கி எடுத்து பயிற்சி செய்வது போன்ற சிறு சிறு நுட்பமான பயிற்சிகளும் அமர்ந்து அமர்ந்து எழுவது போன்ற பயிற்சியில் வயிற்றை சுருக்கி பிதுக்கி உள் இருக்கும் கழிவை வெளியேற்றுவதும் செய்யலாம்..

அதே போல எந்தக் கழிவுகளுமே பெரும் துர்நாற்றமாக மாறிவிடக் கூடாது அப்படி மாறினாலே அவர்கள் உடல் கெட்டிருப்பது சான்று. மேலும் அவர்கள் உண்டதும் சரியல்ல....ஆட்டுப் புழுக்கை உரம், மாட்டுச் சாணம் எரு, பன்றி மலம் நெல்வயலுக்கு ஏற்ற சிறந்த உரம் இப்படி எல்லாம் விலங்குகளின் எச்சங்களே இருக்கும்போது மனிதக் கழிவுகள் ஏன் அப்படி இல்லை எனில் அவர்கள் உண்ணும் உணவின் தரமற்ற நிலையே காரணம். எனவே நாம் முன் சொன்னபடி அந்தக் காலத்தில் மலத்தை குழிபறித்து இருந்து மூடி வைத்து விட்டு வந்து ஆசன வாயை சுத்தம் செய்து கொள்வார்களாம் அவையும் எருவாக மாறும் என்பார். எல்லாம் ஒரு சுழற்சிதான் விவரமாக சொன்னால் ஏற்க முடியாதுதான்.சுருக்கமாக சொன்னாலும் அசிங்கமாகிவிடும்தான். மலம் துர்நாற்றமின்றி இருக்குமாறான உணவை தேர்வு செய்து உண்ணுங்கள் மலச்சிக்கலின்றி நோய் நொடி இன்றி வாழுங்கள் நீண்ட ஆயுள் நிலைத்த பாரம்பரியம் மலர வளர வாழ்த்துகள்...
Related image


ஆனால் இவற்றுக்கு எல்லாம் வழியில்லாமல் உண்ணும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றிலேயே நேரம் காலம் சரிவிகிதம் என மேற்கொள்ளும்போது வாழ்வு சுலபமாகி விடுகிறது இப்போது இன்னொரு மருத்துவ நண்பர் நின்று கொண்டு நீர் குடிப்பார்க்கு வாதம், மூட்டு வலி போன்றவை வரும் என்றும் எனவே அமர்ந்த நிலையில் மட்டுமே நீர் அருந்த வேண்டும் என்றும்,
காலை அதிகாலை நீர் பருகுவதும், உணவு உண்ட 40 நிமிடம் கழித்து நீர் பருகுவதும் நீர் பருகுவதன் சிறந்த முறை  என்கிறார். அதையும் இதையும் எதையும் பரிசோதித்தறிந்து விட்டு உண்மையானால் மேலும் பகிர்ந்து கொள்கிறேன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, November 11, 2017

அறம்: கவிஞர் தணிகை

அறம்: கவிஞர் தணிகை

சினிமா:
Related image



 நயன் தாராவை அடுத்த நிரந்தரமான முதல்வராக‌ அல்லது பிரதமராகவும் உள்ள வாய்ப்பை இவர்களது இரசிகர்கள் நினைக்க, கனவு காண வைக்க மாவட்ட ஆட்சியராக இருந்து பணியை உதறித் தள்ளி மக்கள் சேவைக்கு வந்துவிடுவதாக சொல்லும் படம். இந்தப் படம் இவருக்கும் ;இவரது இரசிகர்களுக்கும் பெரும் பேரை சிக்கனமான பொருட் செலவிலே கச்சிதமாக கொடுத்து விடுகிறது காரணம் இதன் கதையமைப்பு கருப்பொருள் சமூகத்தாக்கம் நிரம்பிய சவலான கேள்விகள்...

நீண்ட நாளுக்குப் பிறகு நயன் தாராவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு நல்ல பேர் இந்தப் படத்தின் மூலம். நடிப்புக்கே இந்தப் பேர் என்றால் உண்மையாக இப்படி இருந்தால் பேர் எப்படி இருக்கும் என்று சொல்ல ....உண்மையில் இருப்பார்க்கும் கூட இப்படி பேர் வருவதில்லை. ஆனால் இப்படி நடித்தாலே உலகப் புகழ் பெற்று விடுகிறார்கள்.

 சினிமாத் துறை அத்தனை விளம்பரத்தை சுலபமாக பெற வைத்து விடுகிறது. எனவே நயன் தாராவுக்கு இது காலமெல்லாம் நினைத்துப்  பார்க்க நினைவில் நிற்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் சினிமா மூலம் நல்லதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை கனவை விதைத்திருக்கிறது. அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறோம் என்றெல்லாம் நினைக்காமல் எளிமையான உடையுடன் ஒப்பனையுடன் சத்யவதியாக மதிவதினி என்னும் பாத்திரத்தில் உறைந்திருக்கிறார்.

நிறைய கேள்விகள் கேட்கப்படுகிறது கோபி நயனார் மூலம் கதையாக, விதையாக, இயக்கமாக இன்றைய ஆட்சிமுறைகளுக்கு எதிராக, கட்சி அமைப்புகளுக்கு சவாலாக...

சுமார் 2 மணி நேரம் ஓடும் படம் கடைசிவரை நம்மை அத்துடன் பிணைத்து விடுகிறது. அதுவும் எமது ரோகிணி கலெக்டராக சேலம் மாவட்டத்திற்கு வந்து சுற்றி சுழன்றாடி வருகையில் அவரையும் நினைத்தபடி இந்தப் படத்தைப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியவில்லை.

ஜெயமோகனின் அறம் என்னும் சிறுகதையை ஜெயமோகனின் தளத்தில்  நண்பர் நாகா மூலம் வாட்ஸ் அப் மூலம் தூண்டப்பட்டு படித்துப் பார்த்துவிட்டு, இலட்சுமி, களைவு என்னும் குறும்படங்களையும் செய்தித் தூண்டல்களால் பார்த்துவிட்டு இந்தப்படத்தையும் பார்த்தேவிடுவது என்ற தூண்டலால் பார்த்து முடித்துவிட்டோம் இதயம் கனமாக.

நயன் தாரா, கிட்டி தவிர எல்லாமே மற்ற யாவருமே சிறு பாத்திரங்களை சினிமாவில் ஏற்ற நடிகர்களை வைத்தே அருமையான படத்தை செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் அனைவர்க்கும் தெரிந்த கருப்பொருள் செய்தியை வைத்தே ஒரு நல்ல படத்தை தந்து விட்டார்.

ஆழ்துளைக் கிணறுகளை தோண்டிவிட்டு நீர் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மூடாமல் விடப்படும் ஆழ்துளைகள் எப்படி சிறுவர் சிறுமியர் தவறி விழக் காரணமாகி விடுகின்றன அவை எப்படி உயிர் விடுகின்றன, அப்படி அங்கிருந்து காப்பாற்றப்பட்டாலும் எப்படி மருத்துவமனைகளில் உயிர் பிரிகின்றன அவற்றுக்கு எல்லாம் அஞ்சலி என்றும் அவை இனி நடக்காமல் இருக்க அரசும் மக்களும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பும் சமூக விழிப்புணர்வூட்டும் சமூக நாடித்துடிப்புள்ள படம்.

உலகெமெலாம் நேற்று சன் தொலைக்காட்சி வெளியிட உரிமம் பெற்றுள்ள படம் நேற்று வெளியாகி உள்ளது. எல்லாத் தரப்பிலுமே நல்ல பேர் பெற்றும்  விட்டது . நமக்கு படம் பார்க்கும் உணர்வே இல்லாமல் நமது கண்முண் பார்க்கும் உண்மைச் சம்பவமாக மிக இயல்பாக தத்ரூபம் என்பார்களே அது போல உயிர்ப்புடன் படம் உள்ளது .

அரம்பத்தில் மிகவும் சாதாரணமாக தண்ணீர் பஞ்சத்தின் கதையுடன் ஆரம்பிக்கும் படம் இருபது இருபத்தைந்து நிமிடங்களுக்கும் மேல் கதையுடன் பயணிக்கிறது. ஆழமாக 140 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி தன்ஷிகாவின் தவறி விழுந்த சம்பவத்துடன்.

அரசியல் வாதிகள், ஊடகங்கள், அரசு அலுவலர்கள் எப்படி அதை அணுகுகிறார்கள், உண்மையான ஆத்மார்த்தமான ஒரு மக்கள் பணியாளர் எப்படி அணுகுகிறார் என்பதுவே படத்தின் கதை.

என்பிலதனை வெயில் போலக் காயுமாம்
அன்பிலதனை அறம்.

 பாராட்ட வேண்டும்

இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக எப்போதோ செய்தி படித்த நினைவுடன்

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

சினிமாவாக பார்க்க முடியாமல் ஒரு நிகழ்வாகவே படம் செய்திருப்பது பற்றி இயக்குனர் கோபி நயனார், தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஸ், ஒளிப்பதிவாளர்:ஓம்பிரகாஷ், தொகுப்பாளர்(எடிட்டர்:ரூபன்) அனைவரையும் பாராட்டுகிறோம். சினிமா என்றாலும் நூற்றுக்கு 65 மதிப்பெண்களைத் தரலாம். ஒரு நல்ல சினிமா, தெரிந்த சம்பவத்தை வைத்தே இப்படி இரசிக்கும்படியாக தயாரித்து வெளியிட்ட அனைவரையும் வாழ்த்துகிறோம்.

Wednesday, November 8, 2017

நன்னன் பாரடைஸ்: கவிஞர் தணிகை.

நன்னன் பாரடைஸ்: கவிஞர் தணிகை.
Related image


இந்தியாவின் அந்த 714 பேர் பற்றி பாரடைஸ் பேசிக் கொண்டிருக்க, தமிழாசிரியர் ம‌.நன்னன் என்னும் திருஞான சம்பந்தன் அவர்களுக்கு இந்தப் பதிவு அஞ்சலியைச் செலுத்துகிறேன். நன்னன் அவர்களின் வயது 94. முழு வாழ்வு.

தமிழாசிரியர்கள் இராஜசேகரனும் தாமோதரனும்:
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================

அப்போது சொல்வார்கள், பேசிக் கொள்வார்கள் மாணவர்கள் தாமோதரன் தமிழாசிரியர் மிகவும் திறமைசாலி, ஒரு திருக்குறளுக்கே விளக்கம் கொடுப்பார் பாருங்கள் முக்கால் மணி நேரம் கொண்ட ஒரு பீரியடு போதாது. அடுத்த நாள் வரும் தமிழ் வகுப்பிலும் அது தொடரும். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சிவந்த உடல். நேர்வகிடு எடுத்த தலைமுடியின் பாங்கு, இவை யாவுமே அவருக்கென்று ஒரு இடத்தை பள்ளியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

இதில் சொல்லப்பட்ட இரு தமிழாசிரியர்களுமே எனக்கு தமிழ் வகுப்பு எடுத்தவர்கள்தான். தாமோதரன் எனது வகுப்புத் தோழன் பாண்டுரங்கன் என்பவனின் சித்தப்பா. ஏதோ நெய்வேலி, கடலூர் பக்கம் அவர்கள் ஊர். எங்களது வைத்தீஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர். நான் குறிப்பிடுவது 1975 முதல் 1978 வரை.

தமிழாசிரியர் இராஜசேகரன் ஒல்லியான உருவம், சிரிக்கும்போது வெளியே வரும் சற்று துருத்திய சில முன் பற்கள். இவரும் வேட்டி சட்டைதான் . அந்தக் காலத்தில் பெரும்பாலுமே ஆசிரியர்கள் வேட்டி சட்டைதான். ஆனால் அது முழுக்கால் சட்டை வந்து விட்ட தருணம்தான். எனவே பாதிபேர் அப்படியும் பாதி பேரு இப்படியும் இருப்பார்கள்.

அவரின் சிரிப்பை இன்றும் என் மனக்கண் கொண்டு பார்க்க முடிகிறது.


இருவருமே இன்று இல்லை எனவே அவர்கள் பற்றி நான் நன்றாக எவரும்
கேட்காமல் எழுத முடியும் வெளிப்படையாகவே...

தாமோதரன் தோற்றப்பொலிவில் இராஜசேகரனை விட எடுப்பாக இருந்தாலும் புன் முறுவலால் இராஜசேகரன் ஆசிரியர் முந்திவிடுவார்.

இராஜ சேகரன் சார் சிதம்பரம் பகுதியில் இருந்து இந்த ஆசிரியத் தொழிலை ஏற்றுக் கொண்டவர் தாய் தந்தை, தம்பி என தமது மணம் முடிந்த பிறகும் ஒரே கூட்டுக் குடும்பமாக இருந்து அனைவர்க்கும் பயன்பட்டவர். தமது 65 வயது வாக்கில் காலமாகிவிட்டார்

மிக அளவுடன் பேசுவார், மிக கண்ணியமாக நடந்து கொள்வார். பேசுவது கூட அதிகம் இருக்காது. அவரது வகுப்பில் நான் படித்தபோது தமிழில் 80 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று முதல் மாணவனாக இருந்தது நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழில் என்னதான் எப்படித்தான் முழுதாக எழுதி இருந்தாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எல்லாம் தரமாட்டார்கள்.

இவர் எப்படி சொல்லித் தருவார் எனில் தேவையான அளவு மட்டுமே இருக்கும். மிகவும் தெளிவாக இருக்கும். சுருக்கமாகத்தான் இருக்கும். கேள்வி பதில்கள் மிகவும் சரியாக தயாரித்து நோட்ஸ் கொடுத்து எழுதிக் கொள்ளச் சொல்லி விடுவார். மிகவும் நன்றாக‌ இருக்கும் எனவே இப்போது நினைக்கும்போதும் பெரிய அளவில் பிரமிப்பூட்டும் பாடம் நடத்துவதாக இருந்த தாமோதரனை விட இராஜசேகரனின் முறைதான் மிகச் சிறந்ததாக இப்போதும் படுகிறது. தாமோதரன் தமிழை விட இராஜசேகரனின் தமிழ் சிறந்தது என்றும் மாணவர்களுக்கு ஏற்றது என்றும் படுகிறது.

தாமோதரன் பாடம் நடத்தலை சாண்டில்யனுக்கு ஒப்பிட்டால், இராஜசேகரனை நாம் கல்கிக்கு ஒப்பிடலாம். ஆரம்பத்தில் சாண்டில்யனே மலைக்க வைத்தது. ஆனால் கல்கியின் அணுகுமுறை போல இராஜசேகரனே காலத்தை விஞ்சி என்னுள் நிற்கிறார். ஏன் எனில் தாமோதரன் என்ன செய்தாரோ ஏது செய்தாரோ முழு விவரம் கிட்டவில்லை, எட்ட முடியவில்லை ஆனால் 3 உயர் நிலைப் பள்ளிக் கூட மாணவிகள் இறப்பிற்கு இவரும் ஒரு காரணம் என இவர் பேரும் அடிபட்டது. அதிலிருந்து அவரது புகழ் மறைய ஆரம்பித்து விட்டது.

ஆனால் இராஜ சேகரன் அப்படியே குணக்குன்றாய் இருந்தார். ஒழுக்கமாய் வாழ்வின் நெறிகளில் இருந்து பிறழாமல் வாழ்ந்து மறைந்து விட்டார்.

பத்தாம் வகுப்பில் பாரதியின்  பாஞ்சாலி சபதம் ஒப்புவித்தல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது.

அவர் நடுவராக இருந்தபோது பதினொன்றாம் வகுப்பு ஒப்புவித்தல் போட்டியில் பாரதி தாசனின் பில்கணீயம் முழுப் பாடல்களுக்கு எனக்கு முதல் பரிசு கிடைத்தது . எனக்கு அடுத்து இரண்டாம் பரிசாக மற்றொரு தமிழாசிரியரின் மகளுக்கு கிடைத்தது. அப்போதெல்லாம் பெரும்பாலும் ஆசிரியர் வீட்டுக் கன்னுக்குட்டிகள்தான் பரிசுகள் பெறமுடியும், முதல் மதிப்பெண்களும்...

ஆனால் எனது வல்லமை அந்த போட்டியில் வெளிப்பட்டபோது அவர் சிரித்த அந்தப் புன்முறுவல் எனக்கு இன்றும் எனக்குள் மகிழ்வாடுகிறது. போட்டி முடிவை நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டிய நேரம் வரை காத்திருந்து காணவேண்டிய அவசியமில்லை என்று பறை சாற்றும் வெற்றி அது. அந்த வெற்றி பற்றி இன்றும் நினைத்தால் எனக்கு இனிக்கவே செய்கிறது. சரி அதன் பின் எத்தனையோ படிகள் ஏறி விட்டபோதும் இன்றும் அது பசுமையான நினைவாக இருக்கிறது.

அப்போதெல்லாம் எங்களது வீட்டில் துணிக்கு சலவை செய்யும் இஸ்திரிப்பெட்டி, அதாங்க அயர்ன் பாக்ஸ் இல்லை. அப்போதெல்லாம் கரியை அள்ளிப் போட்டு ஊதி நெருப்பாக்கி அதன்  வெப்பத்தில் தான் துணி சலவை செய்யப்படும்.

ஒரு வீதி கடந்து இராஜசேகரன் ஆசிரியர் குடும்பம் குடி இருந்தது. எனது மூத்த சகோதரர் அவர்கள் வீட்டில் இருந்து அந்த அயர்ன் பாக்ஸை வாங்கிவர என்னைப் பணிப்பார். எத்தன முறை வாங்கி வந்திருப்பேன் என எனக்குத் தெரியாது ஆனால் ஒரு முறை கூட அவர்கள் வீட்டில் அவரோ அவர்கள் வீட்டைச் சார்ந்தோரோ அதை எடுத்துக் கொடுக்க முகம் சுளித்ததாய் இன்றும் என் நினைவில் இல்லை.

நன்னன் பரவாயில்லை 94 வயது வரை வாழ்ந்திருக்கிறார்

ஆனால் பொதுவாக நல்லவர்கள் எல்லாம் அவ்வளவு காலம் வாழ்ந்தது இல்லை. ஆனால் அவர்கள் நினைவு என்றும் தொடர்ந்தபடி இருக்கிறது என்பதுவே பெருமை.

அந்த இராஜசேகரனின் ஆசிரியர் மகன் அதிகம் உயர் படிப்பெல்லாம் படிக்காமல் ஒரு இரும்பு, சிமெண்ட் கடையில் கொஞ்ச காலம் உதவியாளராக இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Sunday, November 5, 2017

அவளும் விழித்திருவும்: கவிஞர் தணிகை.

Image result for aval tamil movie




அவளும் விழித்திருவும்: கவிஞர் தணிகை.

அவள்:

பேய் ஆவி, ஆன்மா ஆனால் மூட நம்பிக்கை அடிப்படையிலான படம். சித்தார்த்தின் முயற்சி வேறு கோணத்தில் இருந்திருந்தால் அது வெற்றியடைந்திருக்கலாம்.

ஆண்ட்ரியா என்றால் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் பாலுறவுக் காட்சிகளும் அதிகம் இருக்கும் என்ற அடையாளப் பேராகிவிட்டது.

அதுல் குல்கர்னி, ஜென்னியாக நடித்துள்ள அனிஸ் ஏஞ்சலினா விக்டர் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் எல்லாமே சீனத்து முட்டாள்தனமான கதை அடிப்படை கொன்றுவிட்டது. அட நம்ம சுரேஷ் நல்ல பாத்திரம் நன்றாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.

விழித்திரு:

நல்ல முயற்சி. மிகவும் பெரும் தடைகளைத் தாண்டி இந்தப் படம் வெளியிடுதல் தள்ளி தள்ளிப் போனதாக இதன் இயக்குனர் மீரா கதிரவன் வருத்தப்பட்டிருந்தார்.

இந்தப் படத்தை அவருக்காகவாவது அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் நல்ல படம்தாம்.

நல்ல கதை, நல்ல இயக்கம்,. நல்ல சிந்தனை. அனைவரும் பார்க்கலாம்.கிருஷ்ணாவுக்கு இதே மாதிரியான கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சலிக்காமல் செய்தபடியே இவரது வெள்ளித்திரை முயற்சி போய்க் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமய்யா,எஸ்.பி.பி.சரண், டி.ராஜேந்தர், இப்படி பிரபலங்களை எல்லாம் பிடித்து பெரிய படமாக செய்வதற்கே செலவு நிறைய ஆகியிருக்கும்.... நல்ல ஓட்டம், சலிக்காத ஓட்டம்...நல்லதே நடக்கட்டும்...வாழ்த்துகள்.

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.




Image result for vizhithiru


இப்படியும் இன்னும் சிலர் இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை

 இப்படியும் இன்னும் சிலர் இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை

Image result for long way to go

சேலம் குகை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில தமிழ் வழிக் கல்வி முறைகளில் சுமார் 4200 மாணவர்கள் படிக்கிறார்கள். சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் சார்பாக பல் பரிசோதனை முகாம் ஒன்றை நடத்த முதல்வர் ஜா.பேபிஜான் அனுமதியுடன் சமுதாயத்துறைத் தலைவர் என்.சரவணன் வழிகாட்டுதலுடன் பொது உறவு அலுவலர் என்ற முறையில் பணிக்கப்பட்டேன்.

மருத்துவர் பரத் எம்.டி.எஸ், சூரஜ் எ.டி.எஸ் , ராஜேஜ் பி.டி.எஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 15 மருத்துவர்கள் என்னுடன் வந்திருந்தனர்.

மிகவும் அருமையான டீம். சலிக்காமல் தமது சேவைப்பணியை மனங்கோணாமல் செய்தனர்.

காலை 9.30 மணி சுமாருக்கு  பிரார்த்தனை நேரத்திலேயே சென்று சேர்ந்து விட்டோம். அத்தனை மாணவர்களும் ஒருங்கிணைந்து நின்று ப்ரேயரில் பங்கெடுத்ததைப் பார்க்கும் ஒரு அரிய காட்சி.

அது ஒரு சிற்றுரைதான். ஆனாலும் அத்தனை பேரையும் கவர்ந்தது என்று அதன் பின்னோட்டத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் அகமகிழ்ந்து பாராட்டினர்.

ஆசிரியர் ஒருவர் உங்களின் உரை எங்களது மாணவர்கள் அனைவரையும் மிகவும் ரீச் ஆகிவிட்டது என்று பாராட்டினார்.

பல மாணவர்கள் வந்து கை  குலுக்க‌ ஆரம்பித்தனர். சில மாணவர்கள் கையை விடாது குலுக்கி கை உண்மையாகவே வலி எடுத்துக் கொண்டது.விடப்பா விடு என சிறுவர்களைக் கேட்டுக் கொண்டேன். ஒரு சிறுவன் அது என்ன பேசினீங்க, பேசுங்க, பேசிக் காண்பிங்க என்றான், ஏன் நீ பிரேயருக்கு வரவில்லையா என்றேன் , இல்லை சார் பேசுங்கள் சார் என்றான் இங்கு பேச்சைக் கேட்டவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே என்றேன்.

ஏன் எனில் அது ரெடிமேட் பேச்சாக இல்லை, மனப்பாடம் செய்து ஒப்பித்ததாகவும் இல்லை. அதை எப்படி அந்த சிறுவனிடம் சொல்லிப் புரியவைப்பது...?

ஹுசேன் போல்ட் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்திருந்ததை விட்டிருந்தேன் அது ஒரு மாபெரும் சபை, ஒரே இடத்தில் 4200 மாணவர்கள் மிகவும் அமைதியாக இருந்து அந்தப் பேச்சை உள்வாங்கியது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

தமிழ் மாணவர் மன்றத்திற்கு அழைப்போம் மேலும் வந்து அதிகமாக பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர் ஆசிரியர்கள்.

எல்லா மாணவர்களுக்கும் அதாவது முதல் நாளில் 9 ஆம் வகுப்பு வரை பார்த்து வந்தது போக மீதமிருந்த, விடுபட்டுப் போன அனைத்து மாணவர்களையும் பல் பரிசோதனை செய்துப் பார்த்தோம். மேலும் டாக்டர் சூரஜ் தலைமையிலான குழு அவர்கள் கடிப்பது எவ்வளவு வலுவானது என மின் மீட்டார் மானியை வைத்து அளந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆய்வு அங்கு ஒரு இறுதி வடிவத்துக்கு வந்தது.

இத்தனைக்கும் காரணம் ஒரு தலைமை ஆசிரியர் பனி மேதாஸ் என்பார். இவர் 30 ஆண்டுகளாக இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வந்து சேரும்போது இந்தப் பள்ளியின் மாணவர் தொகை 1000 இருந்ததாம் அதை இந்த அளவு மாற்றியிருப்பது இவரது ஆத்மார்த்தமான ஈடுபாடு மாணவர்கள் மேல் பள்ளியின் பால் இருக்கும் பற்று.

இவருக்கு உதவியாக 3 தலைமை ஆசிரியர்களும் நூற்றுக்கு மேலான ஆசிரியர்களும் பணி புரிந்திட, ஆசிரியர் செல்வம் என்பார் உடற்கல்வி ஆசிரியராகவும் தேசிய சேவைத் திட்டத்தின் அலுவலராகவும் இருந்து எங்களைப் போன்று அந்தப் பள்ளியை நாடுவார்க்கு உறுதுணையாக இருந்து நிகழ்வை நடத்த பேருதவி பெறுகிறார்.

நம்மால் எப்படி அவர்களை பாராட்டினால் தகும்? நன்றிக்கடனாக நம்மால் இந்த ஒரு பதிவை இடுவதன்றி...

ஒரு அரசினர் பள்ளியை இந்த அளவு சிறப்பாக கொண்டு செலுத்துவதும் அதில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்ற முயன்று வெற்றி ஈட்டி வருவதும் சாதாரண பணியல்லவே...

இவர் நல்லாசிரியர் விருது பெற்றவரா என்பதெல்லாம் கேட்க மறந்து விட்டேன்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவர் போலும் இன்னும் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் நம் புவியில்...எனவே எனக்கு அவை பார்க்கும்போது அகமகிழ்வு ஏற்பட்டு புளகாங்கிதமடைகிறேன். நன்றி உங்களுக்கு எல்லாம் எமது வணக்கங்கள் உரித்தாகட்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தப் பள்ளியின் ஆக்கத்துக்கு சேலம் குகைப் பகுதியை சார்ந்த தேவாங்கர் குல செட்டியார் இனம் நிறைய செய்திருக்கிறது என்பதை அந்த பள்ளிக் கட்டடங்கள் பறை சாற்றுகின்றன. இதை சாதிய அடிப்படையில் தெரிவிக்காமல் உண்மையை பறை சாற்ற மட்டுமே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை எனைப் பற்றித் தெரிந்தோர் எல்லாம் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் மட்டுமே இதைக் குறிப்பிடுகிறேன். உணர்ந்து கொள்க, தெரிக.புரிக,.தெளிக... நன்றி வணக்கம்.

கவிஞர் தணிகை.


இது மறுபக்கம்:= கவிஞர் தணிகை

சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப்
பற்றி சொல்ல மாட்டார்கள்.
#சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.
அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.
எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை
கிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.
#சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.
அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு .... கு சமானம்
பத்திரிகை முதல் எல்லாம் அரசு கட்டுப்பாடு
#அமெரிக்கா வில் வரி 30%, அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும்,
மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசியல் செய்யும் நாடு அது.
அம்மக்களின் மனநிலையே வேறு, இந்திய மனநிலைக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்திய அமெரிக்க ஒப்பீடு எல்லாம் அர்த்தம் இல்லாதது.
அவர்கள் சாதி,மதம், இனம், திரைப்படம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை. இங்கு அப்படி வாக்களித்துவிட்டு அமெரிக்காவினை பார் என சொல்ல தகுதியே இல்லை.
#அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம். எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. தொலைத்துகட்டி விடுவார்கள்
ஆக உலகெல்லாம் வளமாக இருப்பது போலவும், #இந்தியாமட்டும் கட்டுபாடும் வாழ சிரமமும் உள்ள நாடாக சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
உண்மையில் உலகில் மிக சுதந்திரமான நாடு ஒன்று உண்டென்றால் அது #இந்தியா மட்டுமே.
இங்கு அரசு முதல் ஆண்டி வரை நம்மால் கிழிக்க முடிகின்றது, எந்த பிரச்சினையானாலும் யாரும் கருத்து சொல்ல முடிகின்றது, போர்கொடி தூக்க முடிகின்றது
ஜிஎஸ்டிக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனெல்லாம் டிவியில் அதுபற்றி பேசமுடிகின்றது.
இன்னும் என்னென்ன அழிச்சாட்டியம் எல்லாம் செய்ய முடிகின்றது
இதில் இடஒதுக்கீடு வேறு.
சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா எங்காவது இட ஒதுக்கீடு கேள்விபட்டிருக்கின்றோமா? இல்லை
மாறாக உலகெல்லாம் இருந்து அறிவு ஜீவிகளை வாங்கி படிக்க வைத்து வேலை கொடுக்கின்றார்கள்.
சிங்கப்பூர் அரசை முகநூலில் விமர்சித்தவன் கணக்கை முடக்கி அவனையே முடக்க ஒருமுறை தீவிரமாய் அலைந்தது சிங்கப்பூர்
இந்தியாவின் முகநூலும் டிவிட்டரும் எப்படியெல்லாம் அரசை கிழிக்கின்றன என்பது சொல்லியா தெரியவேண்டும்? அவ்வளவு #சுதந்திரம் நமக்கு இருக்கின்றது.
ஒன்று இந்த சுதந்திரத்தினை அனுபவியுங்கள்
அல்லது சிங்கப்பூர் போல, சீனா போல கட்டுபாட்டுக்குள் அடிமைபட்டு வாழ வாருங்கள். அப்பொழுது வசதிகள் பெருகலாம் ஆனால் பேச முடியாது
இரண்டும் பெறுவது என்பது சாத்தியமே இல்லை. அதுவும் இந்தியாவில் அறவே இல்லை..
வாக்களிப்பது இந்திய பாணியில் ஆனால் ஆட்சியினை எதிர்பார்ப்பது அமெரிக்க பாணியில் என்றால் அதன் பெயர் கனவு, பகல் கனவு.
தேர்தலே வேண்டாம் சீனா போல வாழ தயார் என சொல்ல எவனுக்கு இந்நாட்டில் தைரியம் இருக்கின்றது, ஆனால் சீனாவின் வளர்ச்சியினை பார் என்றுமட்டும் வெட்கமே இல்லாமல் சொல்வார்கள்
ஒவ்வொரு நாடும் அதன் மக்களை எப்படி எல்லாம் கண்காணித்து அடக்கி ஒடுக்கி மூச்சுவிட மட்டும் அனுமதிக்கின்றன என பாருங்கள், அப்பொழுது இந்நாட்டின் அருமை தெரியும்.
சொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா?
வாழ்க பாரதம்!
As received
Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Saturday, November 4, 2017

என் வீட்டுத் தோட்டத்தில்: கவிஞர் தணிகை

என் வீட்டுத் தோட்டத்தில்: கவிஞர் தணிகை


Related image

புதிதாக சில செடிகள் தோன்றியுள்ளன, அவை என்ன செடி என விசாரித்து வருகிறேன். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இயல்பாக தாமாகவே கீழா நெல்லிச் செடிகள் நிறைய வளர்கின்றன. இதன் மகத்துவம் காமாலைக்கு நல்ல மருந்து , மேலும் சரும நோய்களுக்கு இதனுடன் மஞ்சள் அரைத்து பூசினால் அவை தீரும்.

 நான் கொண்டாடும் சோற்றுக் கற்றாழை நிறையத் தோட்டமாகவே ஆக்கி வைத்துள்ளேன். இது அன்றாடம் உபயோகிப்பார்க்கு வேறு நோய் எதிர்ப்புத் தன்மைக்காக வேறு எதுவுமே மருந்து என எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நல்ல மலமிளக்கியாக பயன்படும். ஒரு இதழை தோலை சீவி விட்டு அப்படியே சாப்பிடலாம்.

இதில் சில வகை உண்டு. ஒரு வகை துளியும் கசப்பே இல்லாமலிருக்கும், மற்றொரு வகை கசப்பாகவும் சோறு அதிகமாகவும் நன்கு மொத்தமாகவும் இருக்கும், மற்றொரு வகை சிறு புள்ளி புள்ளியாக தோலில் இருக்கும் , மற்றொரு வகை பாம்பு கற்றாழை இது வேலிக்கு மட்டும் பயன்படும். மேலை நாடுகளுக்கு நிறைய ஏற்றுமதியும் செய்யப்படும். ஆலு வேரா என்று முகப் பூச்சுக்கு, ஒப்பனை பொருட்களில் இதனால் செய்யப்படும் பொருட்களே பெண்களின் ஒப்பனைப் பொருட்களில் தலைமைப் பீடத்தில் இருக்கின்றன.

ஆனால் அப்படியே பயன்படுத்தச் சொன்னால் சீ, அது வேண்டாம் என்பார்கள் அவ்வளவு சல் ஒழுக்கும். ஆடை மேல் பட்டால் அப்படியே கறையாகி கறுப்பாகி நின்றுவிடும் எந்த அழுக்கெடுப்பானும் இதைப் போக்க முடியாது.

கற்பூரவல்லியில் ஓமவல்லி இத்துடன் சில இலவங்கம், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து கொஞ்சம் பாலில் கலந்து கொடுத்து விட்டால் சளி அம்பேல்தான்.

Image result for kariveppila


கறி வேப்பிலை மரம் அப்படியேதான் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கிறது. நிறைய பேருக்கு இதன் பழங்கள் விதைகளுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளன.

விதைகள் விழும் இடங்களில் எல்லாம் சிறு சிறு கறிவேப்பிலை செடிகள் நிறைய முளைத்திருக்கின்றன.

சில மணத்தக்காளி செடிகள் , சில துளசிச் செடிகள் அவ்வப்போது தாமாகவே முளைத்து வருவதும் அழிந்து படுவதுமாகி நிலையாமை வாழ்வை நமக்கு புரியவைக்கும்.

Image result for guava treeImage result for guava tree

கடைசியில் ஒரு ஓரத்தில் முருங்கை மரம். அவற்றின் காய்கள் இன்றும் கூட குழம்புக்கு அவ்வளவு சுவையுடன், நாளை முருங்கைக்கீரைப் பொறியல் செய்யச் சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்னை விட வயதில் மீறிய ஒரு கொய்யா மரம் எப்போதுமே இறந்து படும் என்ற நிலையிலும் இன்னும் சில கனிகளைக் கொடுத்து மண்ணின் மேல் எம் மேல் மாந்தரின் மேல் உள்ள ஈடுபாட்டைக் காட்டியபடி....

நிறைய இனிசுலின் செடிகள் தினம் ஒரு  கையகல இலை தின்றால் நீரிழிவு வியாதிக்கு நல்லதென...

Image result for sapota tree


வயிற்றுப் போக்கு தவிர்க்க சப்போர்ட்டா பிஞ்சுகள் ஊரெங்கும் தேடவேண்டாம் என எனது தங்கை கொடுத்த செடி மரமாக இன்றும் சப்போர்ட்டா கனியாக காய்களைத் தாங்கியபடி...
 Image result for drumstick tree

அத்துடன் சரும வியாதிக்கு பெரிதும் பயன்படும் பெருமருந்துக் கொடி இதை அவ்வப்போது வண்ணத்துப் பூச்சியாக இருக்கும் சிவப்பு கறுப்பு நிறப் புழுக்கள் தின்று கொழுத்து இலைகளே இல்லாமல் செய்தாலும் மறுபடியும் மறுபடியும் இலை துளிர்த்தபடியே இருக்கும்., ஏன் எனில் நல்ல வேர்கள் எப்போதும் தம் வேலையை செய்தபடியே இருக்கும்.

இது எங்களது மைக்ரோ லெவல் ஃபேமிலியின் தோட்டம். இந்த தோட்டத்துக்கு உரிமையாளர் என்று 3 பேர் மட்டுமே.ஆனால் எங்கள் வீடு 10 பேர் அடங்கிய மேக்ரோ லெவல் குடும்பமாக இருந்தபோது என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?

பூவரசு மரம் ஊருக்கே உயரமாக எங்கிருந்து பார்த்தாலும் மஞ்சள் பூக்கள் தெரியும்படியாக, எமது ஊரின் சாலைக்குள் நுழையும்போதே அவை தெரியுமாறு..

3 வகை கொய்யா மரம், வகைக்கு எற்றபடி பழங்கள் தர‌

கொழிஞ்சி மரம், பள்ளி விட்டு வந்தவுடன் ஒரு கொழிஞ்சிப்பழம்தான் டிபன், அப்படி மஞ்சளாக கொழித்தபடி, அவ்வளவு சுவையுடனான இனிப்புடனான ஒரு கொழிஞ்சிப் பழத்தை நான் என் வாழ்வில் தின்னப்போவதேயில்லை.,

கொடுக்காப் புளி மரம் என்னும் எங்கள் மொழியில் சொல்லப்போனால் கோணப்புளியாமரம் எத்தனை பழங்கள் அவை அதிகம் சாப்பிட்டால் காது செவிடாகிவிடும் என்ற தவறான அர்த்தம் தரும் பெரியவர்களின் மொழிகளுடன்..ஆனால் நிறைய பழுப்பதற்குள் காக்கைகள் அவற்றை கொத்தித் தின்ன வர, நாங்களா அவையா போட்டி, ஆனால் எந்தக் காக்கைக்கும் காது செவிடானதாகத் தெரியவில்லை...
Related image


இரண்டு புளிய மரங்கள் கூட இருந்தன பெரிதாகவே...ஆனால் நாவல் புளிய மரங்கள் இருக்கவே கூடாது வீட்டுள் என வெட்டியே தீரவேண்டும் என வெட்டிவிட்டோம் அப்போதே...

மாமரம், பலா மரம் இவை எல்லாம் கூட இருந்தன....ஆனால் மா பெரிதாக காய்கள் வைத்து பழம் தரவில்லை, பலாப் பிஞ்சுகள் சிறிதாக இருக்கும்போதே உதிர்ந்து விழுந்தன எல்லாம் கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் ஓடை பின் புறம் ஓடுவதன் தாக்கம்...

நிறைய வாழை வைத்துப் பார்த்தோம், ஒரிரு குலைகள் ஈனியபின்னே எல்லாம் குலைந்து நீர் ஏறி கசங்கிய நிலையில் பயனில்லாமல் போய்விட...விட்டு விட்டோம்.

Image result for indian flowers


எத்தனை வகையான மல்லிகை, குண்டு மல்லி, இருவாட்சி, மைசூர் மல்லி என, கனகாம்பரம் பூக்கள், அந்தி மந்தாரை என சிவப்பு சிவப்பாக ஆளை அடித்து வீழ்த்துகிற கலரில்,

பாம்புகள் சர்வ சாதாரணமாக பச்சைப் பாம்பு, கோதுமை நாகம் இப்படி ...சில நாட்களில் அந்த மரங்களில் பச்சைப்பாம்புகள் சிட்டுக் குருவிகளைப் பிடித்துக் கொண்டு தலைகீழாக தொங்கியபடி...மாட்டிக்கொண்ட குருவி கீச் கீச் என்று கத்திக் கொண்டே இருக்கும். அதை வாயிலிருந்து பிடுங்கவே முடியாது...உயரமாக மரத்தின் மேல் தொங்கியபடி இருக்க நாங்கள் கீழ் இருந்து உஷ் உஷ் எனக் கத்தியபடியே இருப்போம்...

நிறைய செடிகொடிகள் பேர்கள் மறந்து விட்டன. காலம் ஆண்டுகள் பல கடந்து விட்டதால்... என்றாலும் நினைவு இருக்கும் வரை...
Related image


பூக்கள் விற்பனைக்கு இருக்குமளவு பூக்கும்...அந்தக் காலத்திலும் தோட்டம் இருந்தது இந்தக் காலத்திலும் தோட்டம் இருக்கிறது. பெரிய மரங்கள் ஏதும் இருக்கக் கூடாது வீட்டருகே அவை வீட்டுச் சுவற்றை பாதிக்கும் வேர்கள் வீட்டுள் புகும் என...ஒவ்வொன்றாய் வெட்டி விட்டு, மதில் சுவர் எழுப்பு காம்பவுண்டு போட்டு ...இப்போது இப்படியாக மாறிவிட்ட தோட்டம்..ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறிய தோட்டம் இருக்கிறது. எப்போதும் இருக்கும் ஏன் எனில் அப்படிப்பட்ட வேர்களும் அதன் விழுதுச் சங்கிலிகளுமாக...வேர்கள், விழுதுகள், கிளைகள்...இலைகள், காய்கள், பூக்கள், கனிகள் ...எங்கள் வீட்டின் பெற்றோர் வேர்கள் மறைந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன..Related image



முருங்கைக் காய்களையும், கறி வேப்பிலையையும் சந்தைக்கு வியாபாரிகள் விலைக்கு வாங்கிக் கொண்டுச் செல்லுமளவு இருந்ததை எல்லாம் என்னே சொல்ல‌...
Related image


முதல் கிளை ஒன்றும் விழுந்து விட்டது சில மாதங்கள் முன் மூத்த சகோதரி அங்கமுத்தம்மாள் என...\

இன்று வாசனையற்ற வண்ண மலர்களை துணைவி  சாமந்தி, ரோஜா  அவற்றை ரோஜா எனச் சொல்வதே எனக்குப் பிடிப்பதில்லை..... வாங்கினாள் ஒரு 20 ரூபாய்க்கு...எனக்கு வாசனையற்ற மலர்களைப் பிடிப்பதில்லை வெறும் காட்சிக்காக அவை இருப்பதால்...

மறுபடியும் பூக்கும் வரை...


Wednesday, November 1, 2017

முறையான நடைப்பயிற்சி என்பது: கவிஞர் தணிகை.

முறையான நடைப்பயிற்சி என்பது: கவிஞர் தணிகை.

Image result for good walking

நீங்கள் காலை அல்லது மாலை நடைப்பயிற்சி செய்யலாம் அது உங்கள் கால நேர வசதியைப் பொறுத்தது. அதை எவருமே குறை சொல்ல வழியில்லை.

ஆனால் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முன்  அடி வயிறில் அல்லது மலக்குடலில் மலம் தங்கி இருக்கக் கூடாது. அதைக் கழித்துவிட்டுத்தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுதான் உடலுக்கு நல்லது.

அல்லாத நடைப்பயிற்சி அங்கு செல்லும் காற்றை அசுத்தபடுத்தி அதை உடலெங்கும் விரவ விட்டு கெடுதல் விளைவித்து விடும்.

மேலும் குளித்து விட்டு செல்வது சிறந்தது. அதாவது நடைப்பயிற்சிக்கும் முன் ஒரு முறை குளித்து விட்டு நல்ல மென்மையான துண்டால் கீழ் பாதத்திலிருந்து மேல் நோக்கிய உடலை நன்கு துவட்டிக் கொள்ள வேண்டும்.

ஏன் எனில் உடலின் வியர்வைத் துவாரங்கள் மேல் நோக்கிய நிலையில் இருப்பதால் கீழ் நோக்கி துடைத்தால், சருமத்தில் ஏதாவது துகள்கள் இருப்பின் அது வியர்வைத் துவாரத்தை சென்று அடைத்துக் கொள்ளும் அதன் பின் வியர்வை வெளிப்படுவதில் அது தடையை ஏற்படுத்தி விடும் எனவேதான் கீழ் இருந்து மேல் நோக்கி துடைத்து வியர்வைத் துவாரத்தை நன்கு திறந்து கொள்ளச் செயல்படும் நோக்கம் அது. அதனால் நடைப்பயிற்சியின் போது நன்கு வியர்வை வெளிவர அந்தச் செயல் தடை ஏற்படுத்துவதற்கு மாறாக துணைபுரியும்.

நன்கு வியர்வை வெளியேறிய பின் மறுபடியும் நடைப்பயிற்சி முடிந்த பின் இருப்பிடம் வந்து சேர்ந்ததும், மறு முறை குளித்து விட வேண்டும். நீர்க்குளியல் கணக்குப்படி பார்த்தால் 3 முறை ஆகிவிடும் ஒரு நாளைக்குள்.
நடைப்பயிற்சிக்கு முன்னும் பின்னும் எடுக்கும் குளியல் உடல் கழுவி விடுதல் போல குறைந்த நீரால் கூட இருந்தாலும் போதும்.

அடுத்து இறுக்கமான ஆடை ஏதும் அணியாமல் நன்கு தளர்வான ஆடையும் , வியர்வை வெளியேற்றும் பருத்தி. பஞ்சாலான ஆடையும்,  பனியன் போன்றவையும் நல்லது.
நல்ல காலணிகள் இருப்பதும் அது பாதத்தை மூடி இருப்பதும் நல்லது . இருளில் இல்லாமல் நல்ல வெளிச்சத்தில் போக்குவரத்து வழிகளில் வாகனம் செல்லும் பாதைகளில் இல்லாமல் பாம்பு, பல்லி, தேள், போன்ற பூச்சி இனங்களை நாம் அழிக்காமல் அதன் மேல் கால் வைக்காமலும் அவை நம் மீது ஊறி ஏறாத பாதைகளாய் இருப்பது சிறந்தது.

Image result for good walking
திறந்த வெளியில், கிராமப்புறப் பகுதியில் விண்ணைப் பார்த்தபடி, இருபுறமும் வயல் வரப்பு, பச்சைத் தாவரங்கள் பார்த்தபடி நடப்பது மிகவும் நல்லது

புழுதி மண் மேல் நடக்கலாம்
புல் வெளியில் நடக்கலாம்
மணல் பதிய நடக்கலாம்.

இந்த மூன்று வகையான நடையுமே காலுக்கு நல்லது.

பலர் சேர்ந்தபடி பேசிக் கொண்டே செல்வதை விட அமைதியாக மௌனமாக செல்வதும் நாய் போன்ற செல்லப்பிராணிகளை பிடித்துக் கொண்டே அழைத்துச் செல்வதை விட தனியாக செல்வதுமே சிறந்தது.

Related image

ஆரம்பத்தில் உங்களால் முடிந்த தூரம் வரை செல்லுங்கள், அதன் பின் உங்கள் சக்திக்கேற்ப உங்களுக்கு அது பயிற்சியாய் உடலுக்குத் தெரியும்வரை உடல் கேட்கும் வரை அதிகப்படுத்தி நிலை கொள்ளலாம். எனக்கு அளவு 40+ 40 நிமிடம் அதாவது 4 கி.மீ + 4 கி.மீ சரியாக இருக்கிறது

முறையாக இந்தப் பயிற்சியில் ஈடுபடுவார்க்கு நடைப்பயிற்சிக்கு முன் இருந்த உடல் இறுக்கத்துக்கும் முடியும் போது ஏற்பட்டுள்ள தளர்வுக்கும் ஒரு விடுதலை அடைந்தது போன்ற உணர்வை நன்றாக உணரமுடியும்.

முன்னொரு காலத்தில் அதாவது 1990களில் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் நான் படித்தவையும் இந்தப் பதிவின் நினைவுக்கு உதவி இருக்கிறது. வியர்வை துண்டால் துடைத்தல் போன்றவையும் உடலைக் கழுவுதல் போன்றவையும்.

மற்றவை எனது அனுபவத்தலில் நான் கற்றுணர்ந்து உங்களுக்கு சொல்வது நீங்களும் இதை எல்லாம் உங்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்திப் பார்த்துவிட்டு கடைப்பிடிக்கவும்.

விடியற்காலை நடைப்பய்ற்சி செல்வார்க்கு அதிகம் ஆக்சிஜன் அதாவது ஓசோன் (ஆக்சிஜன் 3) கிடைக்கிறது  என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் மாசுபடலம் நிரம்பிய உலகில் இனி அதை எல்லாம் நம்புவது மிகவும் கடினம்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.