Tuesday, March 26, 2024

தேர்தல் சீர் திருத்தங்கள்: கவிஞர் தணிகை

 தேர்தல் சீர் திருத்தங்கள்: கவிஞர் தணிகை



1. அரசு எந்திரங்கள் வழியே வழி வழியாக நடத்துவதை மாற்றி தன்னிச்சையான சுயேச்சை அமைப்பு மூலம் மட்டுமே தேர்தல் நடத்தலே சிறந்தது. அதே அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கல்வி நிறுவன தனியார், அரசு நிறுவன ஊழியர்கள், மேலும் அரசு ஊழியர்கள் மூலம் நடத்தல் அப்போது நடக்கும் ஆட்சியாளர்க்கு சார்பாய் இருக்க வாய்ப்புண்டு.அப்படி  இல்லாமல் இருந்திருந்தால் 47000 ரூபாயை எடுத்துச் சென்ற நபருக்கு அதுவும் மருத்துவத்துக்கு கொண்டு சென்ற பணம் பிடித்து வைக்கப் பட்டிருக்காது. ரிஷி சுனக், ட்ரம்ப் போன்றோர்க்கும் அந்தந்த நாடுகளில் அங்கு ஒரே விதி...அது போலவாவது இங்கு இருக்க வேண்டுமல்லவா? அதே போல தேர்தல் நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு பிரச்சனைகளை தேர்தல் நாட்கள் காரணம் காட்டி பெரும்பாலான அரசு ஊழியங்கள் நடை பெறுவதேயில்லை என்ற நிலையும் மாற வேண்டும்.


2. கட்சிகள் அடிப்படையில் விகிதாச்சார வாக்கெடுப்பு செய்து  எல்லாக் கட்சி சார்ந்தவர்களும் பெற்ற வாக்கு எண்ணிக்கை  அடிப்படையில் கணக்கீடு செய்து அதன் பின்  விகிதாச்சார அடிப்படையில் தமது பிரதிநிதிகளை ஆட்சி அமைப்பில் பங்கு கொள்ளச் செய்தல்


3. தவறு செய்தோரை திரும்ப அழைத்துக் கொண்டு அதன் பிறகு அந்த அமைப்புகளில் இருந்தே வேறு ஒரு நல்ல பிரதிநிதியை பங்கு கொள்ளச் செய்தல்.


4. ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலே போதும் அது வெற்றி அவருக்கே பிரதிநிதித்துவம் தோற்ற அல்லது எஞ்சிய வாக்கு அனைத்துமே பயனற்றவை  என்று உலகளாவிய உள்ள தேர்தல் நெறியை மாற்றி அனைத்து வாக்காளர்க்கும் உரிய மதிப்பு வழங்கிடும்படியான தேர்தல் முறைகள் ஜனநாயக முன்னேற்றத்தின் அவசியம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Monday, March 25, 2024

தலைமையாய் வா, தலைமையே வா!: கவிஞர் தணிகை

 உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை காலச் சரித்திரத்தில்

இடம் பெற்றவர்கள் இடம் பெறாதவர்கள் பற்றியும் இந்தக் காலக் கட்டத்தில்

நினைத்துப் பார்க்கிறோம்  தலைப்பை ஒட்டி எண்ணிறந்த தலைவர்களின்

பெயர்களும் அவர்களின் குணாம்சங்களும் குறை நிறைகளும்  மனதில்

பெரும்புனலாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.



அலெக்ஸாண்டர் உலகையே வெல்ல எத்தனித்து கையில் ஒன்றும் எடுத்துச்

செல்லவில்லை என்று தனது உயிரற்ற உடலை எடுத்துச் செல்லும் போது தனது

கரத்தை வெளியில் காண்பிக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற தனது இறுதி

விருப்பத்தை வெளிப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.

ஆங்கிலேயர் உலகையே தனது குள்ள நரித் தந்திரத்தின் மூலம் வளைத்து

விடலாம் என மனப் பால் கொண்டிருந்தனர் அவர்கள் பேராசையும் மண்ணாய்ப்

போனது என்பதை உலக சரித்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறது.


அக்பர் 3ஆம் வகுப்பு வரை படித்தவர் ஆண்ட காலம் பொற்கலாம் என்று

சரித்திரத்தில் நாம் படித்து வந்தோம், காமராசரும் தமிழகத்தை ஆண்ட காலம்

மிகவும் முக்கியமானது எனக் கருதப் படுகிறது. அவர் படிக்காத மேதை என்று

புகழப் படுகிறார். 

சித்தார்த்தர் என்னும் இளவரசர் கௌதம புத்தராகி ஞானம்

பெற்று மனித குலத்தின் துன்பம் எல்லாம் தீர ஆசையே அழிவுக்கு காரணம் என்ற

ஞானோபதோசேத்தை வழங்கி துறவின் வழி சென்றார்.உயரிய அறிவு சிகரம்

எட்டுவதையே ஞானம் எனலாம் மனித குலம் அப்படிப் பட்ட நிலையை எட்டுவது

என்பது இலக்கு என்றான போதும் பசி வந்திடப் பற்றும் பறந்து போம் என்ற

பழமொழிக்கேற்ப உடற் பசியா அறிவுப் பசியா என்று கேட்கும் போது உடற்பசி

தீர்த்தலே முன் வந்து நிற்கிறது இங்கு நாம் சொல்லப் புகுவது வயிற்றுப் பசி .

உண்மையில் உடற்பசி என்பதும் கூட உணர்வுப் பசியாக‌ வந்து விட்டால் அறிவுப்

பசி அல்லது 

அறிவு என்பதும் பின்னுக்குத் தள்ளப் படுவது என்பது காமத்தில்.


காமம் என்பது அறிவை சிதைக்கிறது எனவே அதைக் கைவிட்ட ஞானிகளும்

உண்டு,அதை அளவாகப் பயன்படுத்தி மனித குலத்துக்கு புதிய பிறப்பென புதிய

ஆக்கபூர்வமான‌ சக்தியாக மாற்றி மனித குலத்தின் துன்பம் துயர் தீர்க்க மனித

சக்தியாக மாற்றி புனிதம் தேட வேண்டும் என முயன்ற தலைவர்களும் உண்டு

மகாத்மா காந்தியின் காமத்தின் வழி விளைந்த அதன் வழி விழைந்த அதை

ஆற்றொழுக்குப் படுத்திய அதிலிருந்து மீண்ட அத்தியாயங்கள் மனிதர்கள் கற்க

பாடமாகும்.


தலைவர் அல்லது தலைமைப் பண்பு என்பது எவ்வாறு இருக்க வேண்டும்,

ஆள்வது அதாவது மக்களுக்கான நல் வாழ்வைத் தர நிர்வாகம் செய்வது

உழைப்பது என்பது மட்டுமே ஒரு தலைவருடைய வேலையாக ஏன் இருக்க

வேண்டும்?

ஏன் என்றால் விண்வெளி, பூமி, உயிர்களின் தோற்றம், மனித குல வரலாறு

என்பதையெல்லாம் கவனிக்க ஆரம்பித்தால் உயிர்கள் என்றான பின் பசி என்பது

மனிதரை மட்டுமல்ல உயிர்களை எல்லாம் வாட்டும் ஒரு இன்றியமையாத்

தேவையாகிறது. எனவேதாம் இதை பசிப் பிணி என்றார் ஆன்றோர். எனவேதாம்

பசிப் பிணி தீர்த்தலையே தமது தலையானப் பணியாக இராமலிங்க வள்ளலார்

என்ற புனிதர் தமது புனிதப் பணியாகவும் முதற் பணியாகவும் ஏற்றுக் கொண்டு

பசிப் பிணி தீர வடலூரில் அணையா அடுப்பு ஏற்படுத்தி நாடிச் செல்லும்

அனைவர்க்கும் உணவு வழங்கி அருட் பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை

என்றும் வாடிய பயிரைக் கண்டபோதெலாம் மனம் மிக வாடினேன் என்று

மனிதத்தின் சிகரம் ஏறி உச்சியில் வீற்றிருக்கிறார். 


Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.” Mahatma…

புவியில் உள்ள அனைத்து உயிர்களின் தேவைக்கும் பூமியில் போதுமான வளம்

இருக்கிறது ஆனால் பேராசைக்கு எந்த கிரகத்தில் குடியேறினாலும் அவை யாவும்

போதாது. (இது மகாத்மா முன் சொன்ன வார்த்தைகளின் புது வடிவம்)

ஆக தலைமைப் பண்பு என்பதில் புவி உயிர்க்கெலாம் பசி தீர்த்தல் என்பதோடு

மட்டும் தலைவரின் உழைப்பும் பணியும் தீர்ந்து விடாது,அதற்காக உயிர்களை

நெறிப் படுத்தல் வேண்டியதும் அவசியம். அதற்கு முதலில் தலையாய உயிரான


மனித உயிர்களை மனித குலத்தை அதற்கேற்றவாறான அடிப்படைத் தளத்தில்

ஏற்றியாக வேண்டும். அப்படிப் பட்ட செயல்பாடுகளின் போது குற்றம் செய்வாரை

தண்டிப்பதும் அதன் மூலம் மறுபடியும் குற்றம் நேராதபடி சமுதாய அமைப்பு

குலையாத படியும் பார்த்துக் கொள்ளல் அவசியம். எனவே அந்த தலைவரே

முதலில் அதற்கேற்றவாறான நெறியாளராக இருக்க வேண்டியது அதி அவசியம்.

அப்போதுதான் சரியான தொண்டர் படை ஏற்பட வழி பிறக்கும் இல்லாவிட்டால்

குண்டர் படை ஏற்படும். ராஜிவ்காந்தி சதைத் துகளாக மனித வெடிகுண்டால்

பிய்த்தெறியப் பட்ட பின்,இந்திரா சீக்கியரால் பாதுகாவலராய் இருந்தே சுடப்பட்டபின், காந்தியின் சௌரி சௌரா கலவர அமைதிப்படுத்த முயன்ற‌ கதை, இந்திய

சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட இந்து முஸ்லீம் வேற்றுமைக் கலவரங்கள்,அதை

அமைதிப்படுத்த காந்தியாரின் நவகாளி யாத்திரை, இப்படி பல் வேறுபட்ட

காரணங்களால் ஏதோ ஒரு காரணத்தால் மனித குலம் அழிக்கப் படும் குண்டர்

படையால்.


அதன் பேர் உலகப் போராய் இருக்கலாம், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர

அழிப்பாய் இருக்கலாம், ஈழத்து இனப் படுகொலையாக இருக்கலாம்,சீனத்து

தியானன்மென் போராட்ட அடக்குமுறையாக இருக்கலாம் அல்லது ஜப்பானின்

நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க பள்ளியின் இரும்புக் கிராதி உள்ளே வர

முயன்ற பூம்பஞ்சுக் குழந்தையின் சிறு உயிராய் இருக்கலாம், கும்பகோணத்து

பள்ளியின் தீ விபத்தாய் இருக்கலாம், பஞ்சாப் படுகொலையாக இருக்கலாம்

அல்லது பல்வேறுபட்ட உயிர்க் கொள்ளை போகும் விபத்துகளாய் இருக்கலாம்

இப்படி பல்வேறுபட்ட வடிவங்களில் அவை நடக்கும் அவற்றுக்கு எல்லாம்

பின்னால் தலைமை தாங்கும் மூளையின் வெறித்தனம் இருக்கும். ஆனால் இதில்

எல்லாம் தொன்று தொட்டு மடிவதும் மாய்வதும் கோடிக்கணக்கான‌ அப்பாவி

மனித உயிர்களே...


ஆல்ப்ரட் நோபெல் வெடிமருந்தைக் கண்டு பிடித்தது முதலில் ஆக்கபூர்வமான

பணிகளுக்கு மட்டுமே என்றார் இப்போது அமைதிக்கான நோபெல் பரிசு

கொடுக்கப் படும் போதும் உலகெங்கும் அமைதியும் அறப்பணியும் இல்லாமல்

உலகெங்கும் உயிர்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, உடுக்க

உடையின்றி, பிணிக்கு மருந்தின்றி, இளையோர்க்கு கல்வியின்றி

வேலையின்றி,அடிப்படைத் தேவையைக் கூட நிறைவு செய்து கொள்ள

முடியாமல் கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி,மது, புகை,போதை ,எனத்

தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன பல் வேறுபட்ட பாதைகளில்.


ஆனால் எல்லா நாடுகளிலும் மக்களாட்சி முறை என்ற பேரில் கட்சிகளும்

ஆட்சிகளும் தலைவர்களும் இருப்பதாக பேர் இருக்கின்றன.மன்னராட்சியும்,

பிரபுத்துவ ஆட்சியும், முதலாளித்துவ ஆட்சியும் மறைந்துவிட்டன எனச்

சொல்லப் படுகின்றன. ஆக ஒரு சரியான மக்களாட்சி முறையை ஏற்படுத்த

வேண்டிய நெறி ஒரு தலைமைப் பண்பு இருப்பார்க்கு எல்லாவற்றையும் விட

தலையாய பணியாகி விடுகிறது.


தலைமைப் பண்பு அல்லது ஒரு தலைவருக்கு என்ன என்ன பணிகள் என இது

வரைக் குறிப்பிட்டிருக்கிறோம் எனில்: 

1.உயிர்களின் உறு பசிப் பிணி தீர்த்தல் 2.

மக்களை அறநெறிப் படுத்தல். 3. அதற்கான தொண்டர் படையை உருவாக்குதல். 

4.உண்மையான மக்களாட்சி, நிர்வாகம், ஆகியவற்றை ஏற்படுத்தல் ,

5. அது

மட்டுமல்ல எல்லாருக்கும் சம வாய்ப்புகள் ஏற்படும் வண்ணம் பொருளாதார

முறைகளை வகுத்தெடுத்தல் சம வாய்ப்புகளை உண்டாக்கித் தருதல்

ஆகியவற்றை இப்போதைக்குச் சொல்லலாம்.


இது போன்ற முயற்சிகளுக்காகவே சோசலிசம், கம்யூனிசம் போன்ற

தத்துவங்களும் ஏற்பட்டன, ஏன் ஆன்மீகம் எல்லாவித கட்சி, மதம் , போன்ற

அமைப்பு வழிகளிலுமே மனிதர்களின் துன்பம் துயர் துடைத்தலே இலக்கு என

சொல்லப் பட்டு துவங்கப்பட்டு இலக்கு நோக்கி போகாமலே பயணம் செய்து

கொண்டுள்ளன. பிறகு ஏன் அந்த இலக்கை தொட முடியவில்லை...

மறுபடியும்

நாம் சுழற்சியின் தொட்ட இடத்திற்கே வரலாம்: நல்ல தலைவர் இல்லாமையும்,

நல்ல தலைமைப் பண்பு உள்ள நல்ல தலைமைகள் ஏற்படாமையும் அல்லது

கிடைக்காமையும் அல்லது அப்படிப்பட்ட தலைமைகள் இருப்பதை மக்கள்

கூட்டம் தெரிந்து புரிந்து உணர்ந்து அவர் பின் அணி திரளாமையும். மக்கள்

சாதாரணமாக ஒரு தலைமையின் பின் அணி திரளமாட்டார்கள்.


இது இன்று நேற்றல்ல: சாக்ரடீஸ் காலத்தில்( 470 to 399 BC )இருந்தே மக்களது வாக்கு என்பது

அவர் சாக வேண்டுமா உயிருடன் விட்டு விடலமா என்ற வாக்கு எடுப்பு நடத்திய

காலத்தில் இருந்தே வாக்கு எடுப்பு அவருக்கு எதிராக இருந்ததாலேயே அவர்

நஞ்சுக் கோப்பையை சீடர்களின் விருப்பத்துக்கும் மாறாக ஏந்தி உயிரை

மாய்த்துக் கொண்டார்.; காமராசர் என்னும் மாமனிதரும் வாக்களிப்பு முறையில்

தோற்கடிக்கப் பட்டவர்தான்.


சரி அதனால் என்ன தோற்றவர்கள் எல்லாம் சரியான தலைவர்கள்

இல்லையா? வென்றவர்கள் அனைவருமே சரியான தலைவர்கள்தாமா? ஒரு

தலைவர் தன்னுடைய வாழ்நாளில் தேர்தலில் தோற்றதே இல்லை. ஆனால்

அவர் பேர் பின் அவர் பேரப் பிள்ளைகள் தலைமை ஏற்றிருந்தும் அந்தக்

கட்சி ஏன் பின்னடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் பேசப் பட

வேண்டியவைதாம். அவர் நாம் இலக்கணப் படுத்த வேண்டும் என்ற

தலைமைப் பண்புடன் இல்லை. ஆனாலும் அவர் பின் ஒரு மாபெரும்

கூட்டம் இருக்கிறது. கூட்டம் என்பதற்கும் மக்கள் என்பதற்கும் மாக்கள்

என்பதற்கும் வேற்றுமைகள் நிறைய உள்ளன. மன்னன் எவ்வழி மக்கள்

அவ்வழி என்பது மன்னராட்சி பழமொழி. மக்கள் எவ்வழி ஆள்வோர் அவ்வழி

இது மக்களாட்சி புது மொழி. இங்கு நமது பாடம் மக்களைப் பற்றி

சொல்வதல்ல தலைமைப் பண்பு என்று தலைமையைப் பற்றி சொல்வது

எனவே தலைப்பை ஒட்டியே செல்ல முயல்வோம்.


சரி அப்படி எனில் தலைவர்களே இது வரை உலக வரலாற்றில் தோன்றவே

இல்லையே என்றால் எண்ணிலடங்கா தலைவர்கள் தோன்றியுள்ளனர்.

உலகைத் திருத்தும் உத்தமர்கள் அவதரித்துள்ளனர். தேசத் தலைவர்கள் வழி

நடத்தியுள்ளனர். எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பாய் உலகுக்கே ஒரு

உன்னத வழியில் காந்தி தேசம் அஹிம்சை சத்யம் சத்யாக்ரகம் என்ற

வழிகளால் உயிர்ப்புற்று சுதந்திரம் அடைந்தது. அதற்கு தியாகம் செய்த

கோடிக்கணக்கான தலைவர்கள் வரலாற்றில் நிறையப் பக்கங்கள் தேடி எடுக்க

முடியாமலே காலத்தின் இயற்கையோடு கரைந்து போயின. அவர்கள் பேர்

ஊர் விலாசம் தெரியாத போயினும் அவர்கள் செய்த இலட்சியப் பணி

நம்முடன் இன்றும் சுடர் விடுகிறது.

சில தலவர்களை மட்டும் தொட்டுச் செல்வோம்: இந்தியாவின் மகாத்மா காந்தி,

அப்துல் கலாம் ,அன்னை தெரஸா அமெரிக்காவின்: அப்ரஹாம் லிங்கன்,

வாஷிங்டன், கென்னடி, மார்ட்டின் லூதர் கிங்,ரசியாவின் லெனின்,அந்த கம்யூனிச

தத்துவம் தந்த ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ்,

ஏங்கெல்ஸ், கிரேக்கத்தின் சாக்ரடீஸ்.,வியாட்நாமின் ஹோசிமின், சீனத்தின்

மாவோ,க்யூபாவின் பிடல் காஸ்ட்ரோ ,சேகுவாரா,துருக்கியின் கமால் பாஷா,

அறிவியல் விஞ்ஞானி கலிலியோ.சிங்கப்பூரின் லீ குவான் யூ,ஜப்பானின்

அஹிகிட்டோ, இப்படி முக்கியமாக நாடாண்ட தலைமைகளில் இருந்து பல்வேறு

பட்ட துறைகளில் உலகை திருத்திய உத்தமர்கள் ஏராளம்...அவை எல்லாம்

சொல்லில் சொல்லி மாளாது...

சரி நாம் நல்ல தலமைப் பண்பு என்று சொல்வது எவற்றை எல்லாம் என்றால்:

தற்போதைய காலத்துக்கும் 

ஏற்றவராக இருக்க வேண்டுமெனில்:


1. புகைக்காதவராக புகையிலையை பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும்

அப்படி இருந்தால் அது அவரை அவரது உடலை மட்டுமல்ல அதனால் அவரது

குடும்பத்தை ஏன் பொது இடங்களில் பயன்படுத்துவதால் காற்று வெளியை

பொதுச் சுற்றுச் சூழலைக் கெடுப்பதால் அவர் நல்ல தலைமைப் பண்புடன்

இருப்பவராக ஏற்றல் முடியாது...

2.மது அருந்தாதவராக இருத்தல் வேண்டும்: அப்படி மது அருந்துவோராக

இருந்தால் அந்த அரக்கன் அவரை மட்டுமல்ல அவரது குடும்ப, நாடு

அனைத்தையுமே நரகமாக்கி விடுவான். மதுவுக்கு எதிராக போராட வேண்டும்

ஏன் எனில் மது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சமுதாய பின்னடைவுக்கும்

சமுதாய தீமைகளுக்கும் ஆணிவேராக இருப்பதால்.

3. போதைப் பொருட்கள்: குட்கா பான் பராக் பான் மசாலா:போன்றவை உட்பட:

இவற்றின் பயன்பாட்டை ஏற்காதவராகவும் இதனுடன் எந்த வகையிலும்

தொடர்பில்லாதாராகவும் இருக்க வேண்டும். (கஞ்சா, அபின், எல்.எஸ்.டி போதை

மாத்திரைகள், மார்ஜ்வானா,போதை மருந்துகள், போன்ற எந்த

வடிவத்தில்இருந்தாலும் )

மேற்சொன்ன 3 மனித அழிவுகளில் ஏதாவது ஒன்றிலும் விற்பனையிலும்,

உபயோகிப்பதற்கு உதவியாகவும் இந்தப் பயன்பாட்டில் பிறரை ஊக்குவிப்பதல்

போன்றவற்றிலும் இதற்கான ஆலைகள் உடைமையாக வைத்திருப்பதிலும்,

அல்லது பணி புரிவதிலும் இருந்தாலும் அவர் நல்ல தலைமைப் பண்பு இருப்பார்

என்று ஏற்க முடியாது இப்போது நாம் சொன்னதைல் நிறைய எதிர்க் கட்சிகளும்

ஆளும் கட்சிகளும் அதன் தலைவர்களும் தலைமைகளும் நல்ல தலைமையின்

கீழ் வர வழியே இல்லை.அவர்களிடம் தலைமைப் பண்பு இல்லை என்பதும்

தெள்ளென விளங்கி இருக்கும். இவர்கள் எல்லாம் சமுதாயத் துரோகிகளாக

கருதப் படல் வேண்டும். சமுதாயக் கிருமிகளாக, சமுதாயக் களைகளாவார்கள்.


இவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பது இதன் கருத்தல்ல..இவர்களிடம்

இருக்கும் தீய வழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக

இருக்கிறது என்ற காரணத்தால் இவர்களிடம் இருக்கும் பழக்கத்தை துரத்தி

அடிக்க ஆவன செய்தாக வேண்டும். இவர்கள் இந்தப் பழக்க வழக்கத்தில்

இருப்பார் ஒருக்காலும் தலைமைப் பண்பாளராக இருக்க முடியாது...அவர்களை

தலைவர்களாகவும் ஏற்பதற்கில்லை ஏற்கவும் கூடாது.அது என்னதான் பெரிய

எழுத்தாளராயும், இலக்கியவாதியாயும், கலைஞராகவும் இருந்து உலகெலாம்

அவரது படைப்பைக் கொண்டாடிய போதும் அவரை கலைஞராகவேண்டுமானால்

எடுத்துக் கொள்ளட்டும் இவ்வுலகு ஆனால் தலைவராக எடுத்துக் கொள்ளவே

கூடாது.

4. இலஞ்சம் வாங்குவாராகவோ கொடுப்பாராகவோ இருக்கக் கூடாது. இந்த

இலஞ்ச ஊழல் நாட்டின் தீர்க்க முடியா எல்லாத் துறைகளிலும் இருக்கும் பெரும்

பிணி...இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்பது

உண்மையானதாக இருக்க வேண்டுமெனில் முதல் விதியாக இதைக் கொள்ள

வேண்டும். இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற சொற்களை நினைவில்

கொள்வோம்.இப்படி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாலும்

சொல்லாலும் செயலாலும் ஈடுபடுவார் நல்ல தலைமைப் பண்புக்கேற்றார் அல்ல.

5. அமைப்பை ஒருங்கிணைப்பவராகவும், உழைப்பு என்று வந்தால் முதல்

பணியாளராகவும், தியாகத்தில் முதல் நபராகவும் இருப்பாராக

வேண்டும்..இராணுவத்தில் இருக்கும் கேப்டன் போல போர்க்களத்தில் முதலில்

நின்று களப்பலியாக துணிச்சல் உடையாராக வேண்டும். திருப்பூர் குமரன் போல...

அனைவரையும் காட்டிக் கொடுத்து பலிகடாக்களாக்கி தாம் தப்பித்துப்

போகிறவராய் இருக்கவே கூடாது.

6. நான் ஏற்கெனவே குறிப்பிட்டு சொன்னது போல வெற்றி புகழ் என்று வந்தவுடன்

தனது தலையையும் தோளையும் நீட்டுபவராகவும் தோல்வி இகழ்ச்சி

வரும்போது மற்றவரைக் காரணம் எனச் சுட்டாமல் தோல்வியை

தாங்குவாராகவும் வெற்றிக்கு தாம் காரணமல்ல என வெற்றி வரும்போது தமது

இளையோரைத் தூக்கி விடுவாராக இருத்தல் வேண்டும்.

7. இதனை இவன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப

இந்தப் பணியை இவர் செய்வார் என தெரிந்து தெளிந்து அவரை அந்தப் பணிக்கு

நியமிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் அடுத்தவருக்கு வரும் பேருக்கும் புகழுக்கும்

ஆசைப்படாதவராகவும் அதை தடுப்பாராகவும் இருத்தல் கூடாது.

8. காலம் இடம் அறிந்து செயல்படுவாராக இருத்தல் அவசியம்: ஏன் எனில்

முகமது பின் துக்ளக் நல்ல அறிவாளி என்றாலும் அவரது தலைநகர் மாற்றம்

தோல்வியில் முடிய இது போன்ற காலம் அறிந்து இடமறிந்து செயல்படாமை

காரணமாயிற்று என்கிறது சரித்திரம்...அனைவரின் அங்கீகாரம் பெற

வேண்டியதும் அந்தப் பணி வெற்றி பெற அவசியம்.

9. சரியான தூதாக கம்பன் இராமயணத்தில் அனுமனை சுட்டிக் காட்டுவது போல

எங்கு அனுப்புவதானாலும் தேர்ந்து அனுப்பவும் வேண்டும்...

10. தம்மை விட இயக்கத்தின் நன்மையும் பேரும் பெரிது என உருவாக்கம் தெரிய

வேண்டும். 

11. தனி மனித மகாத்மியம் எவ்வளவு பெரியதாக இருந்த போதும் இயக்கம்

மற்றும் அதன் முறைமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடக்கமுடைமை

வேண்டும் அது சரியான தலைமைப் பண்பாக இருக்கும்.

12. சுற்றுச் சூழல் ஆர்வலராகவும், மரம் நடுதல், இயற்கை இரசிகராகவும்,

இருந்தால் அவருக்கு நிலம் நீர் நெருப்பு, காற்று ஆகாயம் ஆகியவற்றின் அருமை

தெரியும் அற்புதம் புரியும் 

12. புதிய நவீன கலைகள் கற்கும் ஆர்வம் உள்ளவராயும், கணினிப் பயிற்சி

உள்ளவராயும் இருந்தால் மட்டுமே நடப்பு உலகிலும் வரும்

காலத்திற்கேற்றவாறும் தாக்குப் பிடிக்க முடியும்..

13. கல்வி கலைகளில் தேர்ச்சி மிக்காராகவும், நூல் பல கற்பாராகவும் இருக்கும்

போது அந்த அனுபவங்கள் அவர் அறிவைச் செறிவூட்டி சமுதாயத்தை பல படிகள்

முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சேர்க்க முடியும்

14. அந்த அந்தக் காலக் கட்டத்தில் மாறிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கு செவி

சாய்த்து எது சரி எது தவறு எது பொய் எது மெய் என்று தேர்ந்து கண்ணோட

தெரிந்தவராக இருத்தல் வேண்டும். கால‌ நடப்புகள் பற்றி அறிந்தவராயும் அதில்

நாட்டமுடையாராகவும் இருத்தல் வேண்டும்.

15. யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு அமைதியாகச் செவியுற்று அதை

நடுநிலையுடன் அணுகி சகிப்புத் தன்மை கொண்டு எப்பொருள் யார் யார் வாய்க்

கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறியும் அறிவு கொண்டாராய் இருத்தல்

வேண்டும்.

16. ஆண் பெண் மூன்றாம் பால் இன பேதமின்றி அனைவரையும் சமமாக பாவித்து

மகளிருக்கு எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் சம பங்கு 50 சதவீதம்

பகிர பாடுபடுவாராய் இருத்தல் வேண்டும்.

17. நதி நீரை இணைத்து நாட்டில் நீர்ப் பஞ்சம் ஏற்படாது உலகில் நீர்ப் பற்றாக்குறை

ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் நெஞ்சமுடையாராக இருக்க வேண்டும்.

18. ஏழை எளியார்க்கும் கீழ்தட்டு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, குடி நீர்,

மருத்துவம் , சுகாதார மற்றும் கழிப்பிட‌ வசதிகளும் அடிப்படைத் தேவைகளை

நிறைவேற்றும் எண்ணமுள்ளவராயும் அதில் வேறுபட்ட கருத்து இல்லாராக

இருக்க வேண்டும்.

19. நாட்டின் நல்ல திட்டங்களை நிறைவேற்ற எடுத்துக் காட்டாக : ஒர் முறை

பயன்பாட்டுக்கான நெகிழியை தடுத்தல், மதுவை ஒழித்தல், புகைத்தலை

தடுத்தல், பொது இடங்களில் புகைத்தல், உமிழ்தல் போன்றவற்றை

முளையிலேயே வேருடன் கெல்லி எறியும் எண்ண ஆற்றல் உள்ளவராயும்

அதற்கு போராடத் தயாரானவராகவும் இருத்தல் வேண்டும்...

20. புகை மது போன்ற உற்பத்தி தொழிலகத்தையே உரிமம் இல்லாமல்

செய்வாராகவும், ஆபத்து உள்ள தொழில்களான பட்டாசு போன்ற தொழில்

செய்வாரை மடை மாற்றம் செய்ய ஆர்வமுடையாராகவும்

செயல்பாட்டாளராகவும் இருக்க வேண்டும். ஏன் எனில் கொள்வார் இல்லையேல்

கொடுப்பார் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இங்கு இவை இருப்பதால்

கொடுப்பார் இருப்பதால் கொள்கிறார்கள் என்பது பொருள் முதல் வாதம்

இரண்டிலுமே மனிதர் கெட்ட வழிக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால்

மேதமை இருப்பார் சொன்னால் திருந்துவார், சிற்றறிவு மிக்கார் இல்லாது

போனால் மட்டுமே திருந்துவார். குழந்தை மனம் அடம் பிடிக்கும் குரங்கு மனமும்

தறி கெட்டுப் போகும். அவற்றை எல்லாம் நெறிப்படுத்தும் கடமை தலைமைப்

பண்பாளர்க்கு உண்டு. மொத்தத்தில் கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற

நிலையை இராமலிங்கர் சொன்னது போல நாமும் சொல்லாமல் இருந்தால்

நல்லதே..

21. ஆடை அணிகலன்களில் ஆடம்பரங்களில் அக்கறை இல்லாராகவும், தோற்றப்

பொலிவுக்காக போலிப் பூச்சுகளை பூசிக்கொள்ளாதவராகவும் பொய்களாகவும்

போலிகளாகவும் தோன்றுதல் இல்லாராகவும் இருக்க வேண்டும்.

22. உடல் ஓம்பும்முறைகளில் நாட்டமுடையாராகவும், உடற்பயிற்சி, தியானம்,

யோகா போன்றவற்றில் ஈடுபாடு உள்ளாராகவும் இருந்தால் மட்டுமே நீண்ட

ஆயுள் ,நிலைத்த செயல்பாடு, வழிகாட்டல் எல்லாம் தோன்ற வழி வகுக்கும்

எனவே அவற்றில் மனம் செலுத்துவாராக இருக்க வேண்டும்.

23. பெண் வழிச் சேர்க்கை ஆண் வழிச் சேர்க்கையில் ஒரு கட்டுப் பாட்டு

நெறியையும், சமூக நெறிகளுடனான ஒழுக்க முறைகள் கடைப்பிடிப்பாராகவும்

இருத்தல் அவசியம்.

24. இயற்கைக்கு மாறான ஆண் பெண், ஆண் ஆண் பெண் பெண் போன்ற இனச்

சேர்க்கைகள் எல்லாம் மனித மாண்புகளுக்கு அப்பாற்பட்டவை என்ற

உணர்வுடையாளராக இருந்து அதன் பால் வழிகாட்டுவாராக இருக்க வேண்டும்


25. பாலியில் கல்வி, அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு, நவீன அறிவியல் புடைக்க

வைக்கும் செல்பேசி கலாச்சாரம், நீலப்படம் ஆபாசப் படம் போன்றவைகளில்

இருந்து இளைய சமூகத்தை நல்வழிப் படுத்துவாராக அக்கறை கொள்வாராக

இருத்தல் வேண்டும்.

26. தலைமைப் பண்பின் கீழ் நாம் என்ன நினைக்கிறோம் எனில்: கொள்வார்

இல்லையேல் கொடுப்பார் இல்லை என்ற அடிப்படையில் புலால் மறுத்தல்

அல்லது மரக்கறி உணவை ஏற்பதும் விவசாயத் தொழிலுக்கு முன்னுரிமை

கொடுத்து அதை மேம்படுத்துவதும் தலையாய பணி என்கிறோம்.

28. பெப்ஸி கொக்கோ கோலா போன்ற பானங்கள் இல்லாமல் செய்து மாறாக

இளநீர், பதநீர் , நீசத் தண்ணீர் பழஞ்சோறு போன்றவற்றை உருவாக்குதல் நல்ல

பண்பாக இருக்க சிறு தானியப் பயிர்களை மறுபடியும் கொண்டு வந்தால்

பரவலாக்கினால் உயிரின் கால நீட்சி அதிகமாகும் எனவே அதிலும் கவனம்

செலுத்த வேண்டும்.

29. மொத்தத்தில் கைத்தொழில்களான நெசவு, கிராமியத் தொழில்கள்,

போன்றவற்றை ஊக்குவிக்க வேன்டும். கிராமியச் சேவையும், கிராமியச் சார்பும் ,

கிராமியச் சமுதாயமும் உருவாக பாடுபடுபவராய் இருக்க வேண்டும்.

30. நாட்டின் பின் தங்கிய கிராமத்திற்கென தமது உழைப்பை நல்கியவராக

நல்குவதில் ஆர்வமுள்ளாராக இருத்தல் வேண்டும்.

31. நாட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாரின் குடும்பங்கள் பற்றி அக்கறை

கொள்வாராக இருத்தல் வேண்டும்.

32.கொள்கை ரீதியாக தோழர்களோ, மக்களோ நியாயமான கோரிக்கைகளுக்கு

பாடுபடும்போது துணை நிற்பாராய் இருக்க வேண்டும்.. இயக்கத்தை அதன் பின்

அணி திரளச் செய்ய வேண்டும்.

33. தர்மச் சிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

34. போராட்டங்களைக் கையில் எடுப்பதில் தயங்காதாராகவும் தேவையான

அறிவு சார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வதுடன் அதை நேர்மறையாக

அணுகுவதுடன் ஒருங்கிணைப்பு போக்கில் சார்புடையாராக இல்லாமலும் தனது

சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நபர்களைத் தேர்வு செய்யாமல் அவரவர் தகுதி

திறமைக்கேற்ப அவர்களை முன்னிறுத்தி இயகக்த்தை மேற்செலுத்துவாராகவும்

இருக்க வேண்டும்.

35. இவை எல்லாம் மீறியதாக வள்ளுவர் வழியில் சொல்லப் போனால்: அவை

அஞ்சாமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை,உழவு,ஊக்கம்

உடைமை,ஒற்றாடல், கள்ளாமை, கள்ளுண்ணாமை,கூடா

நட்பு,கொடுங்கோன்மை, கொல்லாமை,சிற்றினம் சேராமை, சான்றாண்மை, சூது,

செங்கோன்மை செய்ந்நன்றி அரிதல்,சொல்வன்மை, தவம், தீ நட்பு, நடுவு

நிலைமை, நாட்டுப் பற்று, பயனில சொல்லாமை,புலால் மறுத்தல்,புறங்கூறாமை,

பெரியாரைத் துணைக்கோடல், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

36.மக்களை சிறு சேமிப்பு போன்ற நல்ல பழக்க வழக்கங்களில் ஊக்குவிக்கவும்,

இளையோர், குழந்தைகள், ஆண்கள் ,பெண்கள், கிராம சபை போன்றவற்றை

உருவாக்குபவராக இருக்க வேண்டும். அதன் வழியே செயல்பாடுகளை கொண்டு

செலுத்த வழி வகை செய்வாராக இருக்க வேண்டும்.

37. தேர்தல் முறைகளில் மாற்றம் செய்ய சமுதாய அமைப்பை மாற்றி அமைக்க

முயல்வாராக இருக்க வேண்டும்.எடுத்துக் காட்டாக: விகிதாசார வாக்கெடுப்பு

முறை, தேர்வு செய்யப் பட்டார் சரி இல்ல எனில் திரும்ப அழைக்கும் முறை

,நல்ல மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க மக்களை ஒருங்கிணைக்கும் கலை

போன்றவற்றில் முயற்சி, நாட்டம், ஈடுபாடு, விடாமுயறி உடையாராய் இருத்தல்

வேண்டும்.

38. தியான வழிகளில் சொல்வது போல:

1. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்குத் தீங்கு

செய்யாதிருக்க வேண்டும்

( கொசுக்களைக் கொல்லுதல் கூட பாவம்...ஆனால் கொசு இல்லாமல் சுத்தமாக

சுற்றுப் புறத்தை வைத்திருப்பது பாவமில்லையே)

2. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல்

ஆசைப்படாதிருத்தல்


3. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமான உண்மையைக்

கடைப்பிடித்தல்

4. பிரமசாரிய விரதம் காத்தல்

5. பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்...

இவையும் ஒரு சிறந்த தலைமப் பண்புக்கான அடக்கமான அழகான

பண்புகளாகும். சத்தியம் நேர்மை, நம்பிக்கை விடாமுயற்சி, அஹிம்சை,

சத்யாக்கிரகம் ஆகியவை ஏற்பவராக இருக்க வேண்டும்.

39.மகாத்மா டால்ஸ்டாயிடம், ரஸ்கினிடம், குருதேவ் ரவீந்தரநாத்திடம், கோபால

கிருஷ்ண கோகலேவிடம் இப்படி யாவரிடமும் கற்றது நமது தமிழ் இடத்தில்

இருந்தல்லவா...

40.பொய்யாமை பொய்யாமையாற்றின் அறம் பிற‌

செய்யாமை செய்யாமை நன்று

மனத்துக் கண் மாசிலன் ஆதால் அனைத்தறன்

ஆகுல நிர பிற...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண‌

நன்னயம் செய்து விடல்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று....

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந்த் தலை...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Thursday, March 21, 2024

தினம் தினம் (ஏதோ) ஒரு தினம் வந்து போகும்: கவிஞர் தணிகை

 தினம் தினம் (ஏதோ) ஒரு தினம் வந்து போகும்: கவிஞர் தணிகை



இன்று கவிதை தினமாம், நாளை(உலக தண்ணீர் தினம்: மார்ச் 22 சர் . ஆர்தர் காட்டன் பற்றி அறிக‌) தண்ணீர் தினமாம், நாளை மறு நாள் பகத் சிங் நினைவு நாள் (மட்டுமல்ல) தணிகையின் தினம் கூட.(மார்ச் 23)  கருக் கொண்டு உயிராகி சீர் உடல் கொண்டு வெளி வந்த 22646 ஆம் நாள். அதில் லீப் ஆண்டு மட்டும்:16 .63ஆம் அகவையில் அடி எடுத்து வைத்து மறுபடியும் பூமியில் இருந்து கதிரை சுற்ற ஆரம்பித்திருக்கிறேன். 

சிலர் குறுகிய காலமே இருந்து புகழ் அடைந்து வாழ்வின் பொருளை அடைகிறார். பகத் சிங்.சிலர் 104 வயது எங்கள் ஊர் பெரியவர் போல விழாவுக்கு வந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து சிவ புராணம் முழுதையும் பார்க்காமல் இந்த வயதிலும் தெளிவாக ஓதி இருக்கும் இடத்தை மேன்மைப் படுத்தி அனைவரையும் வாழ்த்துகிறார்.அரிய சந்திப்புகள் அரிய நிகழ்வுகள் நிகழ்ந்தபடியேதான் இருக்கின்றன.


எல்லாம் கணக்குச் சொல்கின்றனர்.கணக்கு வைத்துக் கொள்கின்றனர். கணக்குத் தீர்ந்து போகும் வரை.சுதந்திர சரிதம் நிகழ்ந்த நாட்டில் வேடிக்கைப் பேச்சுகள் எண்ணிறந்தன. அதில் இதுவும் ஒன்று.தினம் இறந்து புதிதாகப் பிறந்து பார்க்கச் சொல்லும் தத்துவங்கள்.


நான் ஏன் பிறந்தேன்? என அனைவருமே கேட்க: தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று எனும் வள்ளுவம்.


உண்மை ஒளியை ஏந்திச் செல்வோம் சத்திய நெறியை தாங்கிச் சொல்வோம்.போலிகளுடனும் புரட்டுகளுடனும் சேராமல் தனித்தியங்குதலும் இயற்கையின் மொழியை புரிந்து வாழ்தலும் வாழ்வின் பொருள் என்போம்.


இங்கு பத்தாண்டு கழிந்து ஒரு மனமாற்றம் நிகழ்ந்ததைக் கண்கூடாகக் கண்டோம்.அசோகர் மனம் மாறியதாக, அலெக்ஸாண்டர் மனம் மாறியதாக ஆரம்ப கால சரித்திரங்கள்...புத்தர் மனம் தெளிந்தார் சித்தர்கள் மணம் பரப்பினார் எல்லாம் இவ்வுலகிலே. 


என் அருள் என்றார் ஒருவர். அவர் இயற்கையை படைத்தவர் போல, இயற்கை அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டது சில நாட்களிலேயே. எல்லார்க்கும் ஒரு இடம் உண்டு. அதை நாம் கண்டடையும் வரை சென்று கொண்டே இருப்போம்....


மனிதம் யாவும் ஒரே குலம் என்றார் கணியன் அதையே அறிவியலறிஞரும், ஆன்மீக அறிஞர்களும் சொல்கின்றனர் தாம், நான் என்பது அழிய...நீ யார் என்றால் மனிதர் என்று சொல்லச் சொல்லிக் கொடுத்திருப்பது அறிவு.


உலகெலாம் ஒரே குலம், ஒரே மாண்பு என மனிதம் மாறும் போது அனைவர்க்கும் தாகத்துக்கு நீர் கிடைக்கும், பசிக்கு உணவு கிடைக்கும், சமமான கல்வி கிடைக்கும், தரமான மருத்துவம் கிடைக்கும் உறவுகள் சீர் பெறும், உலக வறுமையும் பிணியும் போக்கப் படும் அப்படிப் பட்ட மானுடத்துக்கு பாடுபட்ட உயிர்களுக்கு எல்லாம் நன்மை செய்ய விழைந்த , விழையும் விழையவிருக்கும் அத்தனை மேன்மையான  உயிர்கள் அனைத்துக்கும் இந்நாளின் வணக்கங்களும், வாழ்த்துகளும், நன்றிகளும் காணிக்கையாக...


கர்வம் மனிதத்திடம் மட்டுமே உள்ளதாக புவி சொல்கிறது.

 நாடுகளின் கோடுகள் கூட இயற்கைக்கு இல்லை.ஆகாயம், காற்று, தீ, நிலம் , நீர் அவற்றில் எழுந்த யாவைக்கும் யாவும் சொந்தம். நன்றி வணக்கம்.

வாழ்த்துகளுடன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Tuesday, March 19, 2024

மகேஸ்வரன் மோனிஷாவுக்கு மண வாழ்த்து

               மகேஸ்வரன் மோனிஷாவுக்கு மண வாழ்த்து


        20. 03.2024  புதுசை சுப்ரமணியஸ்வாமி திருக்கோவில்

                          அதி காலை 4.30 முதல் 6.00 மணி



தந்தையை இழந்த பின் நங்கையை மணமுடிப்பது என்பது

எவ்வளவு கடினம் என்பதை நானும் அறிவேன் மகேஸ்வரன்.


தாரத்தை தாய்க்குப் பின் என்ற தலைமுறை நமது தமிழ் முறை

உனது தனயனுக்கும் தங்க மகளுக்கும் நீ பெரும் பேறு செய்!


நமது தலைமுறை தொடர்பு சங்கிலியின் கண்ணிகள் பிரிபடாமல்

எப்போதும் கோர்த்திருக்க வழித் தோன்றல்களுடன் வழி வழியாய்

பிறக்க சிறக்க பெற்றோர் தந்த இந்த உடலுடன் உயிருடன்

 நாம் நமது பிள்ளைகளுக்கு

உற்றாராய் நிறை வாழ்வு வாழ்ந்து பெரும் பேறு பெற வாழ்வுக்கு

 உயிர் தருவாய்!அத்துடன் தங்கைக்கும் நற் வழி சமைப்பாய்.


பிரபஞ்சத்தின் உயிர்த் துளி(ர்) கடவுளின் காணிக்கை அதில் 

ஒவ்வொரு துளியுமே அமுதசாகர வாழ்வுடன் நகர்கிறது...

பயணம் புறப்படத் தயாராக இருக்கும் உங்கள் இருவருக்கும்

ஏன் நால்வருக்குமே எங்கள் குடும்பத்தின் மனமுவந்த‌


வாழ்த்துகள்

என்றும்

கவிஞர் தணிகை

த.சண்முகவடிவு

த.க.ரா.சு. மணியம்.

Monday, March 18, 2024

சூல் : நாவல்: சோ தர்மன்: கவிஞர் தணிகை

 சூல் : நாவல்: சோ தர்மன்: கவிஞர் தணிகை



இரண்டே எழுத்தில் தலைப்பிட்டு புகுந்து மாயங்கள் செய்கிறார் எழுத்தாளர். சூல்: கருக் கொண்ட மேகம், சூல் கருக் கொண்ட தாய் அல்லது கர்ப்பம் தரித்த பெண், சூல் அறுவடைக்கு விளைந்து நிற்கும் பயிர்களுடைய நன்செய், புன்செய், வெள்ளாமை பற்றிய செயல்கள், இப்படி சொல்லிக் கோண்டே போகலாம் சூல் பூவுள் இருக்கும் மகரந்தக் கேசரம் கூட. அற்புதமான நாவல் மிகவும் நெருங்கிய சிறு எழுத்துகளின் அச்சுக் கோர்ப்பில். இதே 500 பக்கங்களை 600, 700 பக்கங்கள் கூட கொண்டு செல்ல வாய்ப்புகள் உண்டு பண்ணுமளவு.


1801,காலாபாணி போன்ற நாவல்கள் ஒரு வகையில் சோக சரித்திரம் சொல்கிறது என்றால் அதே காலக் கட்டத்தில் சூல் பொது மக்கள் வாழ்வைப் படிக்க ஆவலூட்டுகிறது.


இன்னும் ஐந்தாறு நூல்கள் கைவசம் படிக்கப் படாமல் இருப்பினும் சூல் பற்றி சொல்லியேயாக வேண்டிய நிலை. 500 பக்கம் விலை ரூ.380. அடையாளம் பதிப்பு. புத்தாநந்தம் . 2016 முதல் பதிப்பு 2020 வரை மீள் பதிப்புகள். தற்போதைய விலை ரூ.450 என சற்று முன் இணையவழியில் கண்டேன். சாகித்ய அகாடமி முதல் பல விருதுகளை வென்ற நாவல்.அல்லது இந்தியாவின் தென்னகத்தின் தமிழகத்தின் கட்ட பொம்மு காலம் முதல் தற்கால மக்கள் வாழ்வு மாற்றங்கள் பற்றிய காலப் பதிவு மிகவும் உற்சாகமான சுவையான பதிவு.


எட்டி இருந்து அரசு, அரசாங்கம், ஆட்சி, இராசாமார்கள் பற்றியும் கிட்ட இருந்து மக்கள் வாழ்நிலை மாற்றங்களையும் மிக நன்கு விளக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்தை எண்ணத்தை மிகவும் இலாவகமாக கையாண்டுள்ளார் தர்மன். பாராட்டாமல் இருக்க முடியாது.மேலோட்டமாக என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் ஒரு அடி ஆழம் தொட்டுச் சொல்லும் நாவல்.


நிறைய மாந்தர்கள் உலாவுகிறார்கள். எனவே எல்லாரையும் பற்றி இங்கு சொல்ல முடியவில்லை. புத்தகத்தை திருப்பிக் கொடுத்த பின் தாம் இந்த பதிவு என்பதால் சில குறிப்புகளில் பேதம் இருக்கலாம். அதாவது 25 அல்லது 21 அத்தியாயம் என நினைக்கிறேன்.


மகாலிங்கம் பிள்ளை தரமான வெற்றிலைக் கொடி ஆர்வம் அவர் உயிரை எப்படி மாய்க்கிறது என மிகவும் இயற்கையான நயத்துடன் சொல்லப் பட்ட விதம் வாழ்க்கை எப்போது எப்படி மனிதர்க்கு முடிந்து போகக் கூடும் என்பதை அழகாக சொல்லி விடுகிறது.


ஆசாரி ஒருவன், பனையேறி ஒருவன் இருவரும் சேர்ந்து எப்படி கட்டபொம்மு ராசாவுக்கு உதவியாக இருந்து அவர் குதிரைக்கு இலாடம் அடித்து விட்டு வாழ்க்கை முழுதும் ஒரு புதையலை கட்டிக் காக்கும் பூதமாக விளங்குகிறார்கள் என்பது


குஞ்ஞான் என்னும் மலையாள மாந்திரிகன் எப்படி இராசாவை ஒன்றுமில்லாமல் அடித்து மாயமாக மறைகிறான் என்பது,


காலம் எப்படி சோற்றை விற்பனை செய்ய ஆரம்பிக்கிற நிலையில் கொப்புளாயி எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னிடம், தயிர், மோர், பால், வெண்ணெய் ஆகியவற்றை இலவசமாகவே பெற்றுப் பயனடைவோரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார் என்பதையும் அவர் தமது எருமைகளை தமது மாருடன் சேர்த்து தேய்த்து குளிப்பாட்டுகிறார்  என்பது முதல்,கிறித்தவ தேவாலயங்கள், பள்ளிகள் எட்டிப் பார்ப்பு,


ராசாமார்களிடம் இருந்து விடுதலை பெறுவது, வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை பெறுவது அதன் பின் எப்படி மக்கள் வாழ்வு மாறிச் செல்கிறது என்பதை உடன் இருந்து பார்ப்பது போல இரசித்துச் செல்கிறார். இரசித்துச் சொல்லி இருக்கிறார்.


மேலும் நிறைய சொல்ல உண்டு...ஆனால் படியுங்கள் அது அவசியம். படிக்கும் பழக்கம் நாளாக நாளாக அருகிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காண முடிகிறது ஏன் எனில் பேசுவோர் எல்லாரும் செய்வாராக, ஏன் தமது செய்ல்பாடுகளை குணாம்சங்களை நேர்மையாக வைத்திருப்பாராக இல்லாது போவதால்...


இல்லையெனில் 1330 குறள்களை சிறுவர்களை படிக்க நிர்பந்திக்காமல்: தோன்றின் புகழொடு... ஒரு குறள் படி வாழ்ந்தாலே வாழத் தலைப்பட்டாலே போதுமே...சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாய் வாழும் வரை எவரையும் யாருமே நம்பவே போவதில்லை... இது மிகவும் சுருக்கமாக... ஏன் எனில் சூல் இரண்டெழுத்தில் ஒரு வரலாறை தேக்கிச் சொல்லி உள்ளது போல...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, March 7, 2024

நூல் வேலி தியான ஒளி நடை மொழி உறவின் வழி துளி சதுரத்தில் நான்: கவிஞர் தணிகை

 நூல் வேலி தியான ஒளி நடை மொழி உறவின் வழி துளி சதுரத்தில் நான்: கவிஞர் தணிகை



"பெண்கள் நீரைப் போல ஆண்கள் மலையைப் போல" நீர் ஒரு போதும்... ஜிங்யி...என்ற 45 ஆண்டுகளாக காதலுக்காக காத்திருந்த பெண்....சின்ரன்... சீனப் பெண்கள் சொல்லப் படாத கதையில்...


நண்பர் வி.கி சொல்வது போல நான் என்பதை எடுத்து எறிந்து விட்டால் அதன் பின் எல்லாம் வெற்றிதான் என்கிறார் யார் உடன் வந்தாலும் வராவிட்டாலும் இவர் இலக்கு நோக்கி நகர்ந்தபடியே இருக்கும் ஒரு வெற்றியாளர்தாம்.


நண்பர் வசந்த் சொல்வது போல "சாய்வு நாற்காலி" போன்ற கதையை எல்லாம் ஏன் தோப்பில் மீரான் போன்ற எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று நடு நாயகமான பாத்திரத்தின் மேல் அருவெறுப்பு கொள்ளும் கடைசி வரை தொடரும் முதலாளித்துவ சிந்தனையின் கொடுமைக் கதை.


எம்.வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள், நித்ய கன்னி போன்ற நூல்களைப் படித்தால் அந்த நபருக்கு எல்லாம் எதற்கு சாகித்ய அகாடமி விருது என்றே சொல்லத் தோன்றும். அவர் எதற்கு எழுதி அதை பிறர் படிக்க கொடுக்கிறார்கள். வெறும் நாட்குறிப்பாக எழுதி வைத்து அவரே நுகர்ந்து கொள்ளலாம்.


படிப்பாரை கேனை, முட்டாள் என்று நினைத்தபடி செலுத்தப் படும் உளறல் அல்லது உதவாத இலக்கியங்களுக்கு இவை எல்லாம் சான்று. இவை போன்ற புத்தகத்தை படிக்காதிருப்பதே நல்லது.


ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களை படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே (மனோ நிக்ரஹமே) மனம் என்ற ஒன்றை இல்லாதததாக்குவதே குறிக்கோள் எனக் கொள்வார் அளவற்ற நூல்களை படிப்பதால்  பயனில்லை என்பார்


என்றாலும் எனைப் போன்றோர் நிறையப் படித்து கண்களையும் உடலையும் கெடுத்துக் கொள்வோம் காரணம் பிறருக்கு வழி காட்ட வேண்டும் என்ற பேராசை


வைரமுத்து கூட கவிதை எழுதலாம், சினிமாப் பாட்டு எழுதலாம், கருவாச்சி காவியம்,  கள்ளிக் காட்டு இதிகாசம் என்று படிப்பாரை நேர விரயமே செய்துள்ளார். தண்ணீர் தேசம் சற்று பரவாயில்லை.


கலைஞர், பேரறிஞர் போன்றோர் கூட எழுதிய எழுத்துகளில் சுவையற்றதாகவும் இருக்கிறது.


முனைவர் மு.வ வின் எழுத்துகள் கதைகள் யாவும் வறட்சியான நடையாய் இருக்கும் ஆனால் கருக்கள் அசாதரணமாக இருக்கும். படிப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும் 



இதை எல்லாம் விமர்சனப் போக்கில் சொல்வதில் தலை ஒன்றும் போய்விடாது. கலை கலைக்காக கலை மக்களுக்காக என்று எப்போதும் இரு வேறு கூறான விவாதம் உண்டு. நான் கலை மக்களுக்காக இருக்க வேண்டும் என்று வாழும் அணி.


சமீபத்தில் படித்ததில் பிடித்தது: சாவு சோறு என்ற இமையம் அண்ணாமலை அவர்களின் சிறு கதைத் தொகுப்பு நல்ல சிந்தையைத் தூண்டும்  க்ரியா வெளியீடு. விலை ரூ.190. பக்கம் 160. குளறுபடியில்லாமல் மிகத் தெளிவான நடை. எடுத்துக் கொண்டிருக்கும் கருக்களும் நன்றாக இருக்கிறது.


சாவு சோறு என்ற சிறுகதைத் தலைப்பையே புத்தகத்தின் பெயராகவும் கொண்டு சொல்லவே ஒரு துணிச்சல் இருக்கிறது. திருட்டுப் போன பொண்ணு, ஆகாசத்தின் உத்தரவு, அரசாங்கப் பள்ளிக் கூடம், பரிசு. எதை பத்தினி இலை என்கிறார் என எனக்கு விளங்கவில்லை... பத்தினி இலை, பேராசை, ராணியின் காதல், வரம் எல்லா பிரசுரமான, பிரசுரமாகா கதைகளும் நன்றாகவே இருக்கின்றன. பாராட்டலாம். இந்த இமையம் என்னும் அண்ணாமலை ஒரு பள்ளி ஆசிரியர் கடலூர் மாவட்டத்துக்காரர்.


அதன் பின் சீனத்துப் பெண்கள் சொல்லப் படாத இரகசியம் என்னும் நூல் அரிய நூல் சின்ரன் என்னும் சீனத்து வானொலி ஒலிபரப்பாளரின் அனுபவங்களாக வந்திருக்கிறது. இவரை சீனாவில் வாழவிடாமல் செய்து பெண்ணுரிமைப் போராளி என்ற வகையில் சீனாவில் இருந்து தப்பி யு.எஸ் வாழ்வு. அருமையான நூல் 316 பக்கம் 200 பக்கம் படித்து முடித்திருக்கிறேன் விலை ரூ. 280 எதிர் வெளியீடு. 96. நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002. தொலைபேசி:04259 226012,9942511302 முதல் பதிப்பு டிசம்பர் 2016 தமிழாக்கம் ஜி.விஜயபத்மா.  நல்ல பணி சிறக்க வாழ்த்துகள்.


அதல்லாமல் பல நூல்கள் இன்னும் படிக்கப் படாமல்: சோ.தர்மனின் சூல்...500 பக்கம், காலாபாணி 1801 புத்தகத்தின் தொடர்ச்சி., நாடு கடத்தப் பட்ட சுதந்திர வேள்வியாளர்களின் நிலை என்ன ஆனது என ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களின் பி.டி. எப்  இப்படி படிக்க இன்னும் நிறைய இருக்கிறது


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: நூல்களில் கட்டுண்டும், தியான ஒளியில் சிதறுண்டும், நடைப் பயிற்சியில் உடல் ஆரோக்கியம் கொண்டும், உறவின் ஒரே வழிமொழிதலில் ஒட்டியும் எனது துளி சதுர வாழ்வில் நான்கு கோணங்களுடன் இணைந்து கிடக்கிறது எனது உயிரும் வாழ்வும்.


சொல்ல மறந்தது: முன் பகிர்ந்து கொண்ட‌ இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு... வம்சம் என்ற ஒரு பெண் அவரின் செயல்பாடு குடும்ப உறவுகளைச் சீர் படுத்துகிறது என்பதற்கும், தலைப்பு மறந்து விட்டது: அனைவராலும் கைவிடப் பட்டு இனி பிழைக்காது என்று இறந்து போனதாக எல்லாம் நினைத்த ஒரு குருவியை சிறுவன் அவனது பலத்த( இடைவெளி சந்தகமில்லா )நம்பிக்கை எப்படி அந்த குருவியை உயிர்ப்புறச் செய்து கடைசியில் உயிர்த்தெழச் செய்து பறந்து போக வைக்கிறது என்ற ஒரு மறக்க முடியாத கதை. அதை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். அது போலவே நானும் இருக்கிறேனோ என்ற சந்தேகக் கீற்று என்னிடமும் உண்டு.


மார்ச் 8 பெண்கள் தினம், மஹாசிவராத்திரி, இப்படி பல பார்வைகளுடன்... அது எப்படியாயினும் அதற்கு இந்த பதிவு அடையாளமாகட்டும்.


"பெண்கள் நீரைப் போல ஆண்கள் மலையைப் போல" நீர் ஒரு போதும்... ஜிங்யி...என்ற 45 ஆண்டுகளாக காதலுக்காக காத்திருந்த பெண்....சின்ரன்... சீனப் பெண்கள் சொல்லப் படாத கதையில்...



Saturday, March 2, 2024

என்மகஜெ

 என்மகஜெ: அம்பிகா சுதன் மாங்காடு: கவிஞர் தணிகை

மலையாளச் சூழலியல் நாவல் தமிழில் : சிற்பி



படிக்கும் பழக்கம் போய் பார்க்கும் பழக்கம் காலம் வந்த நிலையிலும் எழுதியபடி இருக்கிறோம் இன்னும் சிலர்.எப்படி சொல்கிறேன் எனில் எனது தம்பி ஒருவர் ( அவருக்கு பெற்றோர் இருவரும் இல்லை சிறு வயது. நமக்கும் தான்) தனது தந்தை இறந்த நிலையில் நியாய விலைக் குடும்ப அட்டையில் இருந்து தந்தை பெயரை நீக்க கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார் உடனே எழுதிக் கொடுத்தவரான இவர் பெயரை நீக்கி விட்டனர். இறந்த தந்தையின் பெயர் இன்னும் இருக்கிறது. சரி செய்ய சட்டத்திற்கு புறம்பான வழியை நாடுவது தான் நம் நாட்டில் இருக்கும் சிறந்த வழி என்று அவரது மாமா அதே துறையில் நல்லதொரு பொறுப்பான பணியில் தொலை தூர மாவட்டத்தில் இருந்து வருபவர் அனுபவம் இருப்பதால் வழி காட்டி இருக்கிறார். எனவேதான் சொன்னேன் பார்ப்பதோடு சரி எவரும் படிக்க ஆர்வப் படுவதேயில்லை என.


என்மகஜெ: சொல்லின் பொருள் எட்டுப் பண்பாடுகளின் நாடு என்பதாகும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. எண்மகஜெ என்று இருந்திருந்தாலாவது எண் வகை பண்புகள் கொண்ட இடம் என்ற முடிவுக்கு வர சரியாக இருந்திருக்கலாம். அப்படித்தான் எழுதியோர் சொல்கிறார்கள். இதை ஒரு ஆனந்த யாழை மீட்டுகிற ஆராரிராரோ பாடுகிற தங்க மீன்கள் போன்ற‌ நாவல் என்று பேரை வைத்து நினைத்தேன். பெரும்பாலும் அனைவர்க்கும் அப்ப‌டித்தான் தோன்ற வாய்ப்பு. ஆனால் இது என் மக(ள்) ஜெ அல்ல. முற்றிலும் வேறு.


சிற்பி( பாலசுப்ரமணியம் ) பொள்ளாச்சி தொழில் நுட்பக் கல்லூரிக்கு 1979ல் வந்த போதும் எளியவராகவே காட்சி அளித்தார். அவரும் எனது தோழர் ஒருவரின் நண்பர் இளையபாரதி என்னும் ராஜேந்திரன் என்பவரும் அன்றைய கல்லூரி+ கோவை வானொலி ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு விருந்தாளிகளாக இருந்தனர். இருவரும் அப்போது கோவை வானொலி நிலையத்தில் பகுதி நேர சேவை செய்ததாகவும் நினைவு.


சிற்பியை விட, ராஜேந்திரனை விட நாம் அதிகம் சாதிக்க முடியும் என்ற பெருமிதம் காணாப் போனது வாழ்வுச் சூறைக் காற்றில்.சிற்பி பாலசுப்ரமணியம் தான் இந்த நாவலின் மொழிபெயர்ப்பாளர்.அவர் தமிழறிஞராக நின்று நிறைய மைல்கற்களைத் தாண்டி சென்றபடியே இன்னும் 84ல் ஓய்வறியா பயணத்தில். ராஜேந்திரன் மத்தியக் கலால் வரித் துறையில் அப்போது நீண்ட முயற்சிக்கும் பின் ஆய்வாளர் ஆனார். இப்போது பெரும் பொறுப்புக்கும் பின் ஓய்வு பெற்றிருக்கலாம்.


வித்தியாசமான நாவல் "என்மகஜெ" இதன் ஆசிரியர் மாங்காடு அம்பிகா சுதன் சொல்லியபடி நடந்தவைகளுள் கற்பனையும் கலந்திருக்கிறார்.


நீலகண்டன் கருத்தடை செய்து கொண்ட ஆண்,உடலை விற்றுப் பிழைத்த ஒருபக்கம் மார்பகத்தை இழந்த( ஒரு முலையை அறுத்து எடுத்த பின் வாழ்வதாகவே நூல் சொல்) கர்ப்பப் பை எடுத்துக் கொண்ட தேவயானியுடன் (இருவரும்) உலகை விட்டு ஒதுங்கி யாருடனும் பேசாமல்  எவரும் எளிதில் தொட முடியா ஒரு மலைக்காட்டில் குடி அமைத்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். இந்த உலக வாழ்வும் மனிதர்களும் வேண்டாமென்று புறக்கணித்து விட்டு. ஒருவர்க்கொருவர் துணையாக இருக்கிறார்கள். அதிக நாட்கள் ஒருவர்க்கொருவர் துணையின்றி வாழ முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.


நீலகண்டன் தேவயானியை குற்றுயிரும் கொலையுயிருமாக 4 கல்லூரி இளைஞர்களிடம் சிக்கி சின்னாபின்னப் பட்டு ஒரு காட்டில் கிடக்கும் உடலாகவே கண்டு எடுத்து மூச்சி இருக்க கொண்டு வந்து காப்பாற்றுவதுதான் அவர்களின் முதல் சந்திப்பு. அதன் பின் அவர்களின் சேர்ந்த தேர்ந்தெடுத்துக் கொண்ட‌ வாழ்வுதான் இந்த நாவலின் கதை .


 கீழே சந்தைக்கு வர நேரும் போது  ஒரு நாள் கீழ் சிறு கிராமம் ஒன்றில் பெற்றோர் தூக்கிட்டு மாய்ந்து விட ஒரு குழந்தை அனாதையாக யாரும் இன்றி கிடக்க‌ அதை எடுத்து வருகிறாள் தேவயானி. அந்த குழந்தைக்கு அப்போதே நரைமுடி, அழ முடிந்தால் சத்தம் வராமை , தொண்டைக்குழி இல்லாமை ஓரிரு வயது இருக்கலாம் என்று நினைத்தால் அதற்கு 8 வயதுக்கும் அதிகமாக இருப்பதாக அதற்கு மருத்துவம் பார்த்த நல்ல மருத்துவரின் மொழி,  அதன் பின் தெய்வக் குற்றத்தால் அந்த மலையெங்கும் அதே பல்லவியுடன் சரணங்களாக சோக கீதங்கள், நிறைய குழந்தைகள் (அப்நார்மலாக) சாதாரண‌ மனித இயல்புக்கு மாறாக...அது மட்டுமல்ல 3 கால் கன்றுக் குட்டிகள், இரு தலை மாடு,தேனிக்கள் கூட இல்லாமை, புழு பூச்சிகள் இல்லா, மண்ணும், நீரும்...இப்படி அதிர்ச்சிகள் எங்கெங்கும்... எல்லாம் ஜடாதாரிக் கடவுளின் தண்டனை என... பாவத்துக்கு பழி வாங்க என... நமக்கு போபால் விஷ வாயு பற்றி ரயில்வே மேன் தொடர் சொன்ன கதை நினைவிலோட மேலும் படிக்க நேர்கையில்...


ஒத்த மனம் உள்ள சிலர் சேர்கிறார்கள் அது "என்டோ சல்பான்" என்ற மருந்து ஹெலிகாப்டர் மூலம் அரசு முந்திரிப்பண்ணைகளில் தெளிப்பதன் தெளித்ததன் தெளிக்கப் போவதன் விளைவே என...முடிந்த வரை உயிரைப் பணயம் வைத்து அதற்கு எதிராக போராட ஆரம்பிக்கிறார்கள். பெரும் வாழ்வா சாவா போராட்டம். அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை. வழக்கமான அரசியல் மந்திரி, தலைவர், அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்ட அரசுத் துறைகள், காவல் நிலையம் இப்படி சென்று கடைசியில் முடிவாக யார் பக்கம் வெற்றி தோல்வி என்றெல்லாம் சொல்லாமல் 288 பக்கம் நூல் விலை ரூ.200 நமக்கு கேள்விகள் எழுப்பி நிற்கிறது. 2013 வெளியீடு. இது கேரள மாநிலத்தில் நடந்த கதை.


 கடைசியில்  நீலகண்டனையும் தேவயானியையும் மரத்தில் ஆடையின்றி தலைகீழாக கட்டித் தொங்க விட்டு தீ இட்டு கொளுத்த  தமது அடியாட்களுக்கு ஆணையிட்டு விட்டு சிரித்தபடி இருக்கும் தலைவருக்கு திடீரென வயிறு ஏதோ கோளாறு செய்ய‌ இயற்கை உபாதையை துணியை எல்லாம் கழட்டி விட்டு நிர்வாணமாக கழிக்கச் சென்ற தலைவரை வெகு இயற்கையாக பெரும் பாம்பு ஒன்று தோளில் மேல்  போட்டு விடுவதுடன்/தீண்டி விடுவதுடன் கதையின் அத்தியாயம் தொக்கி நிற்கிறது... நிர்வாணமாக கத்தியபடி அலறுகிறார் தமது அடியாட்களை உடனே வந்து காப்பாற்ற எடுத்துச் செல்லும்படி.அதற்குள் நிறைய படிப்பவரும் அனுபவப் படுகிறோம்.


திரைப்படத்துக்கான ஒரு நல்ல கதை.

என்டோ சல்பான், கார்பைடுக் கல், டைக்ளோபினக் எல்லாமே விலக்கி வைக்கப் பட்ட மருந்து பிற முன்னேறிய நாடுகளில். இந்தியாவில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறதென செய்திகள் இருக்கின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.