Wednesday, May 2, 2018

திருமணச் சிக்கல்கள்: கவிஞர் தணிகை

திருமணச் சிக்கல்கள்: கவிஞர் தணிகை


Related image


காலம் காலமாக ஆயிரங்காலத்துப் பயிராகத் தொடரும்  ஆணும் பெண்ணும் இணையும் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான வாயில் இந்த திருமணம். ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் இதன் கோணங்கள், பிம்பங்கள், காட்சிகள் மாறுபட்டதாகவேத் தெரியவில்லையே.

1. காதல் திருமணங்கள்: ஆசிட் ஊற்றி காதலியை முகத்தை எரிப்பது,கழுத்தை அறுப்பது, வெட்டுவது , வெட்டிக் கொல்வது, குத்திக் கொல்வது, மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைப்பது நீங்கலாக சாதி, மத வேறுபாடுகள் கௌரவக் கொலைகள், சாதி மறுப்பு மணங்கள்...இவை எல்லாமே வாழ்க்கையை சூறையாடியே வருகின்றன.

2. பெற்றோர் அல்லது பெரியவர்களால் முடித்து வைக்கப்பட்ட திருமணங்கள்: இவற்றிலும் அதிக சதவீதம் தோல்வி அடைந்து விவாகரத்து வழக்குகளாக குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கி கிடப்பதாக அனுபவப் பட்டவர்கள் சொல்லக் கேள்வி.

3. போன மாதம் திருமணம் ஆயிற்று. இந்த மாதம் விவாகரத்துக்கு போகிற மணங்களும், திருமணத்திற்கு முன் நாள்,அல்லது மணமேடைக்கு வரும் முன் சற்று நேரம் முன்னால் மணமக்கள் தூக்கு, தப்பிச் செல்ல, இப்படியும் பல மணங்கள் நின்று போனதாக உண்டு.

4. அடுத்து வரதட்சணை: அழகான , நல்ல கலர், வேலையிலும் இருக்கும் பெண்களை மணக்கக் கூட வரதட்சணை இவ்வளவு, இப்படி கொடுத்தால் மட்டுமே நடக்கும் செய்து கொள்வோம் என பிடிவாதம், அந்த மணத்தின் பின் தொடரும் கொடுமைகள்...

5. வரதட்சணை வாங்குகிறார் என சில பெண்கள் தெரிந்ததும் அந்த மணத்தை உதறித் தள்ளும் கொள்கைப் பிடிப்புடனான துணிச்சலான முடிவுகள்.

 6. மதுப்பழக்கம் இல்லாத, புகைப்பழக்கம் இல்லாத கெட்ட பழக்கங்கள் இல்லாத வரதட்சணை கேட்காத, இவ்வளவு பவுன் போடுங்கள் என டிமான்ட் செய்யாத குடும்பமாயிருந்தால், நல்ல பணியிலிருந்தால் மட்டுமே இந்த வீட்டு வாயிற்படியை பெண் கேட்டு மிதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நல்ல திருமணம் செய்து நன்றாக வாழ்க்கை வாழும் குடும்பங்களும் உண்டு.

7. சொந்தத்தில் திருமணம் என வெற்றி பெற்றும் தோல்வியுற்றும்  சில மணங்கள் பெற்றவர்களுக்காக செய்து கொள்ளும் திருமணங்கள்...

8. திருமணம் செய்தும் குழந்தை இல்லாததால் மறுமணம் செய்து கொள்ளும் நிலை, சேர்ந்து வாழ்ந்து பிரிந்து கொள்ளலாம் என்னும் நிலை, ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் நிலை, திருமணம் செய்து கொள்ளும் நிலை... உரிய வயது வரும் முன்னே மணம் செய்து கொள்ளும் நிலை, ஏழைப்பெண்ணுக்கு தாலிக்குத் தங்கம் படித்த பெண்களுக்கு திருமணச் செலவுக்கென ஐம்பதாயிரம் அரசு மானியம்...நல்லவர்கள் பெரும்பணக்கார மனம் படைத்தவர்கள் செய்து வைக்கும் திருமணங்கள், கட்சிக்காரர்கள் நடத்தி வைக்கும் மணங்கள்...

9. திருமணமில்லாமலே முதிர் கன்னிகளாக பெண்களும் 40 வயதையும் மீறியும் மணமில்லா நல்ல நல்ல ஆண்களும் இப்போது இருப்பது மிகவும் சாதாரணம்.ஏன் எனில் நல்ல பெண்ணுக்கு நல்ல ஆணும் நல்ல ஆணுக்கு நல்ல பெண்ணும் கிடைப்பதென்பதே பெரும் குதிரைக்கொம்பாய் இருக்க, பெற்றோரும் சொந்த பந்தங்களும் தமது வாய்ச்சொல் என்னும் திருப்பங்களால் வாழ்க்கையை விரயமாக்க விரயமாக காரண காரியம் என காட்டி வயதை தள்ளி அடைய வேண்டிய குடும்ப நலத்தை சுகத்தை மறுதலிக்கின்றன.மறுதலித்து வருகின்றன.


இதற்காக நல்லதை நிலை நிறுத்தும் பொருட்டு தீட்டப்படும் சட்டங்கள், நீதி, அரசு ஆணைகள் எல்லாம் இருந்தும் எதுவும் பெரும் மாற்றத்தை விளைவித்ததாய் தெரியவில்லை...

காமராஜ், நேரு போன்றோர் இந்த நாட்டு முன்னேற்றத்திற்கு என அணைகள், ஆலைகள் இப்படி கொண்டு வந்து கல்வி கொடுத்து மக்களை வாழவைக்க பெரு முயற்சி எடுத்துக் கொண்டனர் தன்னலம் துறந்து...ஆனால் அதன் பின் வரும் அரசுகள் மதுக்கடையை மூட மாட்டேன் எனச் சொல்லிக் கொண்டு மதுவிலக்குப் பிரிவு என ஒரு பிரிவை வைத்துக் கொண்டு செலவு செய்து வருகின்றன...நீரை எல்லாம் தனியாருக்கு கொடுத்துவிட்டு பொதுமக்களுக்கு நீர் பிரச்சனையை தீர்ப்பதாக வேடிக்கை மாயம் செய்து வருகின்றன...இப்படித்தான் எல்லாம் தலைகீழாக மனித வாழ்கை பெரும்பாலும் தவறான வழியில் பொய், புனை சுருட்டுகளுடன் பயணம் செய்தபடி இருக்கின்றன...

அவரவராய் தனி மனித கொள்கைப் பிடிப்புடன் எது நேர்மை, எது உண்மை, எதன் பின் செல்ல வேண்டும் என அவரவராய்ப் பார்த்து தெளிந்து  முடிவெடுக்காவிட்டால் அவரவர் வாழ்வை அந்தந்த தவறின் விளைவாய் அனுபவித்து வாழ்ந்து முடித்து செல்ல வேண்டியதுதான்...எது சரி எது தவறு என காலம் அவர்களுக்கும் நமக்கும் காட்டிக் கொடுக்கும்

என்னதான் இருந்தாலும் இந்த நூறு கோடி  பேருக்கும் மேல் வாழும் நாட்டில் இப்போது ஒரு அமைதியின்மை நிலவுவதை எல்லா நிலைகளிலும் காண முடிகிறது . சமூக நீதி என்பதற்கான அள்வீடுகள் பெரும்பாலும் குறைந்து வருகின்றன. இது ஒரு மதிப்பீட்டிலான பதிவு. எனவே இது ஒரு காலத்தை குறிக்கும் பதிவானதன்றி வேறு எந்த எதிர்பார்ப்புடனும் எவரையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டி எழுதப்பட்டதல்ல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment